முல்லா ஏன் அழுதார்
ஒரு நாள் முல்லா தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவருடைய நண்பர் முல்லாவிடம் ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.
அதற்கு முல்லா சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பாவும் இருபது லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். எனது அத்தை சென்ற வாரம் எனக்கு 30 லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு அவரும் இறந்துவிட்டார். எனது தாத்தா மூன்று நாட்களுக்கு முன் 50 லட்சம் ரூபாயை இறக்கும் முன் எனக்கு எழுதி வைத்துவிட்டார் என்று கூறிவிட்டு, மேலும் முல்லா அழுகையை நிறுத்தாமல் அழுதுக்கொண்டே இருந்தார்.
அதற்கு நண்பர் உனக்கு கிடைத்த இவ்வளவு ரூபாய்களை வைத்து சந்தோஷப்படாமல் ஏனப்பா அழுகிறாய்? என்று கேட்டார். அதற்கு முல்லா, நண்பரிடம் இனிமேல் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து போவதற்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் யாரும் இல்லை என்பதை நினைத்து அழுதுகிட்டு இருக்கேன் என்றார். முல்லா சொன்னதைக் கேட்ட நண்பர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
நீதி :
பிறர் நமக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.
COMMENTS