இலக்கு.
அது ஒரு விளையாட்டு அரங்கம். அங்கே சில இளைஞர்கள் வில், அம்புப் போட்டியில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஆனால், அந்த இளைஞர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் தங்களுடைய இலக்கு வட்டத்தை எட்டமுடியவில்லை. அம்பு திசைமாறிச் சென்றுகொண்டே இருந்தது.
ஒரு ஜென் துறவி அந்த பக்கமாக மெதுநடை போட்டுக்கொண்டு வந்தார். இதைப் பார்த்த ஜென் துறவி மெல்லச் சிரித்தார்.
இளைஞர்களுக்குக்கோபம் வந்துவிட்டது. "உனக்கு என்ன சிரிப்பு,! தியானம் செய்யற உனக்கு வில், அம்பைப்பற்றி என்ன தெரியும்? இவ்ளோ தூரத்தில் இருந்து அந்த இலக்கை குறிவைப்பது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?" என்றார்கள்.
பணிவாகச் சொன்னார் ஜென் துறவி.
"இருந்தாலும், நான் ஒரு சின்ன முயற்சி செய்து பார்க்கறேன், கொஞ்சம் அந்த வில், அம்பைக் கொடுங்கள்!"
அந்த இளைஞர்கள் சிரித்துக்கொண்டார்கள்.
"இவன் அம்பு விடப்போறானா!" என்று கேலி செய்தபடி அவரிடம் வில், அம்பைக் கொடுத்தார்கள்.
துறவி வில்லை நிமிர்த்தி நிறுத்தினார். அம்பைப் பொருத்தி எய்தார். அவ்வளவுதான், அது இலக்கைத் தாக்கியது!
இளைஞர்கள் அசந்துவிட்டார்கள். "மன்னிக்கவும்..,நீங்க பெரிய வில்வித்தை நிபுணரா?" என்றார்கள்.
"இல்லவே இல்லை. நான் இப்போதுதான் முதல்தடவையாக வில், அம்பைத் தொட்டேன் ஆனால், என்னோட கவனம் மொத்தமும் தான் இலக்கில் மட்டுமே குவிந்து இருந்தது. உங்களுக்கு அப்படியில்லை, கிடைக்கப்போற பரிசு, பாராட்டு, புகழ், பணம் இதைப்பத்தியெல்லாம் யோசிச்சுகிட்டே முயற்சி செய்தீர்கள். அதனாலதான் எத்தனையோ திறமை இருந்தும் உங்களால அந்த இலக்கைத் தொடமுடியலை!" என்றார் ஜென் துறவி.
செயலில் மட்டுமே கவனம் கொண்டவர்கள் அதை சிறப்பாக செய்து முடிக்கிறார்கள். பலனை எதிர்பார்த்து செயலாற்றுபவர்கள் பதட்டத்துடன் செயலை பாழாக்கி விடுகிறார்கள்
COMMENTS