புதிய பாலம் கட்டுமான பணிகளுக்காக களக்காட்டில் 150 ஆண்டுகள் பழமையான கற்பாலம் இடிப்பு
களக்காடு: களக்காட்டில் புதிய பாலம் கட்டுவதற்காக 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. களக்காடு பழைய பஸ் நிலையத்தில் காமராஜர் சிலை அருகே நாங்குநேரியான் கால்வாய் குறுக்கே நாகர்கோவில் பிரதான சாலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டு கால பழமை வாய்ந்த கற்பாலம் உள்ளது. தற்போதும் மிகவும் வலிமையுடன் காணப்பட்ட போதும் பாலம் குறுகியதாக இருந்ததால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருகி வரும் வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு, குறுகிய பாலத்தை அகற்றி விட்டு அகலமாக புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலம் கட்ட ரூ.86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரலில் பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.
ஆனால் மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பான குழப்பத்தால் கட்டுமான பணிகள் துவங்கவில்லை. இந்நிலையில் கடந்த 7ம் தேதி முதல் பழைய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. களக்காட்டில் இருந்து வள்ளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஜெ.ஜெ.நகர், கோவிலம்மாள்புரம், டோனாவூர், மாவடி வழியாகவும், இதுபோல் வள்ளியூரில் இருந்து களக்காடு வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் எஸ்.என்.பள்ளிவாசல், சிதம்பரபுரம் வழியாகவும் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளது. நேற்று புதிய பாலம் கட்டுவதற்காக பழமையான கற்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது. ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் பாலம் தகர்க்கப்பட்டு வருகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர். இந்த சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக திகழ்வதால் புதிய பாலத்தை தொய்வில்லாமல் விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
COMMENTS