திருச்சி - சிங்கப்பூர் இடையே செப்.16 முதல் இண்டிகோ விமான சேவை தொடக்கம்....
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு தினசரி நேரடிப் போக்குவரத்தைத் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது இண்டிகோ விமான நிறுவனம்.
திருச்சி-சிங்கப்பூர் இடையே ஏற்கெனவே, இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் டைகர் (ஸ்கூட்) நிறுவனங்கள் நேரடி விமானப் போக்குவரத்தை நடத்தி வருகிறது. டைகர் தினசரி காலை மற்றும் இரவு வேளையில் என மொத்தம் இரு விமானங்களையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தினசரி ஒரு விமானத்தையும் இயக்கி வருகிறது.
தினசரி 3 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையிலும் திருச்சி -சிங்கப்பூர் இடையே விமானத்தில் இருக்கை கிடைப்பது அரிதாக உள்ளது. காரணம், திருச்சி மற்றும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூர் நிறுவனமான சில்க் ஏர்வேஸ், ஜெட் பிளஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் திருச்சியில் கால்பதிக்க, கள ஆய்வுகள் முடிந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், இண்டிகோ நிறுவனம் தனது திருச்சி-சிங்கப்பூர் சேவையை தொடங்கவுள்ளது.
பயண கால அட்டவணை: அதன்படி தினசரி அதிகாலை 2.45-க்கு சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானம் (எண். 6 இ-44) 4.40-க்கு திருச்சியை வந்தடைந்து, மீண்டும் இங்கிருந்து (எண். 6இ 43) அதிகாலை 5.35-க்கு புறப்பட்டு பகல் 12.40-க்கு சிங்கப்பூரை அடையும்.
COMMENTS