மழைநீர் புகுந்ததில் சமயபுரம் கோயில் உண்டியல்கள் மூழ்கின 2.66 லட்சம் ரூபாய் நோட்டுகள் சேதம்....
மண்ணச்சநல்லூர்: திருச்சியில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் சமயபுரத்தில் 17 செ.மீ. மழை கொட்டியது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதில் இங்குள்ள பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயிலில் 3 அடி அளவுக்கு தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள உண்டியல்களும் நீரில் மூழ்கியதில் காணிக்கை பணம் நனைந்தது. இதையடுத்து நேற்று வடிநீர் வாய்க்கால் மூலம் கோயில் வளாகத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் கோயிலில் 9 உண்டியல்களும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் கொடிமரம், மேற்கு மற்றும் கிழக்கு பிரகாரத்திலிருந்த உண்டியல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவற்றில் இருந்த காணிக்கை ரூபாய் நோட்கள் நனைந்தன.இதனால் நோட்டுகளை எண்ணுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து நனைந்த ரூபாய் நோட்டுகளை அயன்பாக்ஸில் ஒட்டி காயவைத்தனர். நீரில் நன்கு ஊறியதில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கிழிந்து சேதமடைந்தது. பின்னர் காயவைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. 9 உண்டியல்களிலும் ரூ.20லட்சத்து 86ஆயிரத்து 879 ரொக்கமும், 740கிராம் தங்கமும், 2.446 கிலோ வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 42 இருந்தது. இதில் 2லட்சத்து 66ஆயிரத்து 300 ரூபாய் நோட்டுகள் நீரில் நனைந்ததில் சேதமடைந்தன. சமயபுரத்தில் மாதத்துக்கு 2 முறையும், விழா நாட்களில் 3 முறையும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும். கடைசியாக கடந்த 29ம் தேதி எண்ணப்பட்டது. மழை நீர் புகுந்ததால் உண்டியல் எண்ணப்பட்டு 5 நாட்களே ஆன நிலையில் நேற்று மீண்டும் எண்ணப்பட்டது. சமயபுரம் கோயில் தாழ்வாகவும், ரோடு மேடாகவும் உள்ளதால் லேசான மழைக்கே தண்ணீர் புகுந்து வருகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
COMMENTS