ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டி அகற்றம்
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அடுத்த வளவம்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி மாரிக்கண்ணு (55). இவருக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்றில் கட்டி இருந்துள்ளது. இருப்பினும், வறுமையினால் அதைப்பற்றி அவர் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த ஒருமாதமாக அதிக வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மிகுந்த வயிற்றுவலி ஏற்பட்டதால் உறவினர்கள் உதவியோடு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தலைமை மருத்துவர் பெரியசாமி அவரை பரிசோதித்தபோது வயிற்றில் பெரியகட்டி இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, அவர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து, மாரிக்கண்ணுவின் வயிற்றில் இருந்த 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர். மருத்துவர்கள் ரேகா, பிரதிபா, செவிலியர்கள் கீதா, சத்யா மற்றும் சாந்தா, மீனாட்சி ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தலைமை மருத்துவர் பெரியசாமி கூறுகையில், இதுபோன்ற கட்டிகள் சாதாரணமானவையாகவும், நோய் உண்டாகக்கூடியதாகவும் இருக்கும். இது எந்தவயது பெண்களுக்கும் வர வாய்ப்புள்ளது. அதிகமாக 40 வயதிற்கு மேல்தான் அதிகமாக வருகிறது. அதனால் வயிற்றுவலி, செரிமானம், சிறுநீர் பிரச்னைகள், வாந்தி, முதுகுவலி ஆகியவைகள் இருந்தால் உடனே உடல் பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் பெற வேண்டும் என்றார்.
COMMENTS