நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிரான வழக்கு: போக்குவரத்து துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
சென்னை: நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிரான வழக்கில் தமிழக போக்குவரத்து துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் விசாரணையில் தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பல பேருந்துகள், நடத்துனர் இல்லாமல், ஓட்டுனர் மூலம் மட்டும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பேருந்துகளில் நடத்துனர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்ட விதிக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நடத்துனர் இல்லாமல் பேருந்துகளை இயக்குவதால் பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி, மாநகரம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறதா? என வரும் 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்க போக்குவரத்துத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
COMMENTS