கடலாடி அருகே மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி : விஏஓ, டிரைவர் மீது தாக்குதல்; ஒருவர் கைது
சாயல்குடி : கடலாடி அருகே மணல் கடத்தலை தடுக்கச்சென்ற தாசில்தார் ஜீப் மீது, டிராக்டரை மோதி கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தின்போது விஏஓ, ஜீப் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி மலட்டாற்றில் இரவு பகலாக மணல் அள்ளி கடத்தப்படுகிறது. மணல் கடத்தலை தடுக்க கடலாடி தாசில்தார் முத்துலட்சுமி, மலட்டாறு பகுதியில் நேற்று மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது கடலாடி அருகே மணிவலசை என்ற இடத்தில் மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாசில்தார் முத்துலட்சுமி தலைமையில், ஆர்.ஐகள் மாலதி, கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன், உசிலங்குளம் விஏஓ பிரசாத், தலையாரி இருளாண்டி ஆகியோர் அங்கு சென்றனர். அங்கு சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதை தாசில்தார் முத்துலட்சுமி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது தாசில்தார் ஜீப் டிரைவர் கண்ணதாசன் அங்கு நின்ற 2 பைக்குகளின் சாவியை எடுக்க முயன்றார். உடனே 2 பேர், தாசில்தார் ஜீப் டிரைவர் கண்ணதாசன், விஏஓ பிரசாத் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். மேலும், டிராக்டர் டிரைவர் வேகமாக ஓட்டி வந்து, தாசில்தாரின் ஜீப் மீது மோதி, அவரை கொல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஜீப்பின் முன்புறம் சேதமடைந்தது. இதுகுறித்து புகாரின்பேரில், வழக்கு பதிந்த கடலாடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தாசில்தார் செல்போனில் பதிவு செய்த வீடியோவின் அடிப்படையில், எம்.கரிசல்குளத்தை சேர்ந்த ராம்குமாரை(23) கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
COMMENTS