கொள்ளிடத்திலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு
திருச்சி முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கர்நாடக மாநில அணைகளின் உபரி நீர் தமிழகத்துக்குத் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது.
இந்த நிலையில், பாசனத்துக்காக கடந்த 19 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடி வீதமும் திறக்கப்பட்டு பின்னர் அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனூரிலுள்ள கதவணையை வந்த பின்னர், அங்கிருந்து முக்கொம்பு மேலணைக்குத் திறக்கப்பட்டு, அங்கிருந்து முதலில் காவிரியிலும், நீர்வரத்து அதிகரிப்பால் கொள்ளிடத்திலும் தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரியில் வினாடிக்கு 30,000 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 47,000 கன அடி வீதமும் முக்கொம்பு மேலணையில் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து குறைப்பால் இந்த அளவு குறைக்கப்பட்டது. இதனால், கொள்ளிடக்கரைப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த வெள்ள அபாயமும் சற்று நீங்கியது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகளிலிருந்து வரும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை வினாடிக்கு 61,291 கன அடி தண்ணீர் வந்த நிலையில், சனிக்கிழமை அதன் அளவு 68,660 கன அடியாக உயர்ந்தது. இதனால், அந்த அணையிலிருந்து திறக்கப்பட்ட 67,000 கன அடி தண்ணீரில், காவிரி டெல்டா பாசனத்துக்காக 30,000 மும், உபரிநீர் வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட 16 கண் மதகுகள் வழியாக எஞ்சிய நீரும் திறக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 59,135 கனஅடி வீதம் தண்ணீர் வந்த நிலையில், 59,714 கன அடி வீதம் திறக்கப்பட்டது.
எனினும், மாயனூர் கதவணையிலிருந்து திறந்துவிடப்பட்டதன் அடிப்படையில் முக்கொம்பு மேலணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 60,000 கன அடி வினாடிக்கு வந்து கொண்டிருந்தது. இதில் காவிரியில் வினாடிக்கு 25,000 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 35,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் சனிக்கிழமையைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக 3000 கன அடி திறக்கப்பட்டதால், மீண்டும் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. தண்ணீர் குறைந்து காணப்பட்டதால் சலவைத் தொழிலாளர்கள் ஆற்றங்கரையோரத்தில் துணிகளைத் துவைத்த நிலையில்,திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகமானதால், படித்துறைப் பகுதிகளில் மட்டுமே துவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கொள்ளிடத்தில் இருகரைகளையும் தொட்டுச் செல்லும் தண்ணீரைப் பார்க்க பொதுமக்கள் ஆற்றின் பாலப் பகுதிகளில் நின்று செல்கின்றனர். பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பாலப் பகுதிகளில் நின்று செல்பி எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்த நிலையிலும், பலர் அதை கண்டுகொள்ளாமல் செல்பி எடுத்தவாறு இருந்தனர்.
COMMENTS