சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் வாடாவிளக்கில் எண்ணை ஊற்ற உத்தரவு : பக்தர்கள் அதிருப்தி
பெரம்பலூர்: பெரம்பலூர்அருகேயுள்ள புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயில் முன்புறமுள்ள வாடாவிளக்கில் நெய், எண்ணை ஊற்றி செல்லலாம் என கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுகாளியம்மன் கோயில், பழனி, சமயபுரத்தை போல தங்கத்தேர் அமைந்துள்ள சிறப்புமிக்கது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, இக்கோயில் பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாகும். திங்கள், வெள்ளிக்கிழமை மற்றும், புத்தாண்டு, பவுர்ணமி, அமாவாசை தினங்களிலும் திறக்கப்படும்.
இந்நிலையில் பிரபலமான கோயில்களின் பாதுகாப்பு கருதி, திருச்சி மத்தியமண்டல ஐஜி வரதராஜ் உத்தரவின்பேரில் மெட்டல் டிடெக்டர் வைக்க உத்தரவிட்டதன் பேரில் கடந்த மாதம் முதல் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலிலும் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் திருப்பணிகள் கோடிக்கணக்கான மதிப்பில் நடைபெற கடந்த மாதம் பூஜை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவாச்சூர் கோயிலில் அகல் விளக்குகள் ஏற்ற பக்தர்களுக்குத்தடை விதித்து புதிதாக கோயில் நிர்வாகத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடுஅரசு இந்துசமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுப்படி, இக்கோயிலில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது ஜூலை 1ம் தேதி முதல் தடைசெய்யப்படுகிறது. தீபம் ஏற்ற விரும்பும் பக்தர்கள் கோயிலில் விளக்கு ஏற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள வாடாவிளக்கில் தாங்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றலாம் எனத்தெரிவித்துள்ளார். இது பக்தர்களுக்கு பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
COMMENTS