நெல்லை அருகே மூடும் நிலைக்கு சென்ற பள்ளியை மீட்ட கிராமத்தினர் : முன்னாள் மாணவர்கள் முயற்சி பலித்தது
நாங்குநேரி: நாங்குநேரி அருகே சிங்கநேரியில் மூடும் நிலைக்கு சென்ற பள்ளியை முன்னாள் மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் இணைந்து மீட்டனர். தமிழகத்தில் பல அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளன. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் 10 மாணவர்களுக்கு குறைவாக பயிலும் பள்ளிகளை அருகிலுள்ள பள்ளியோடு இணைக்க கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. நெல்லை ஆலங்குளம் அருகே கருவாநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஒற்றை இலக்கத்திற்கு மாணவர் எண்ணிக்கை குறைந்த நிலையில் அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றினைத்து மாணவர் சேர்க்கையை 50 ஆக உயர்த்தி மூடும் நிலையிலிருந்த பள்ளியை மீட்டனர். மேலும் பல்வேறு கல்வி ஆர்வலர்கள் மூலம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தனர். அங்கு ஆங்கில வழி வகுப்பு பிரிவும் ெதாடங்கப்பட்டது.
இதேபோல் நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் மீட்கப்பட்டு அபார நிலையை அடைந்துள்ளது. இப்பள்ளியில் 90 மாணவர்கள் படித்த நிலையில் கட்டிட வசதி, ஆங்கில வழிக்கல்வி வசதியில்லாததால் மாணவர் எண்ணிக்கை 40க்கும் கீழ் சரியத் தொடங்கியது. இதனால் பள்ளியை மூடும் நிலை ஏற்படாமல் தவிர்க்க கிராமத்தினர், இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை தொடர்பு கொண்டனர்.
இதில் முன்னாள் மாணவரும் மதுரையில் தொழில் நடத்துபவருமான ரகுபதி பண்ணையார் பள்ளிக்கு அருகேயிருந்த 20 சென்ட் நிலத்தை பள்ளிக்கு வழங்கினார். ஹெச்டிஎப்சி எர்கோ காப்பீட்டு நிறுவனம் தேசிய அளவில் ஆண்டிற்கு 4 கிராம பள்ளிகளுக்கு தலா ரூ.50 லட்சம் புதிய கட்டிடத்திற்காக நிதி வழங்குகிறது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் சிங்கநேரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அந்நிதியை பெற்று அந்த இடத்தில் புதிய வகுப்பறை கட்ட முயற்சி மேற்கொண்டார்.
இதையடுத்து பல கட்ட ஆய்வுக்குப்பின் இந்த ஆண்டு தமிழகத்தில் இந்த கிராம பள்ளிக்கு அந்த நிதி கிடைத்தது. அதன் மூலம் 5 வகுப்பறைகள், கணினி அறை, மாற்றுதிறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் 3 கழிப்பறைகள் போன்றவை புதியதாக கட்டப்பட்டன. மேலும், விளையாட்டு பொருட்கள், பூங்கா, மின் மோட்டார் இணைப்புடன் குடிநீர் வசதி போன்றவையும் அமைக்கப்பட்டன. மேலும் ஆங்கில வழி கல்வி கற்பிற்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதன் காரணமாக இப்பள்ளி சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மும்பை எச்டிஎப்சி எர்கோ இன்சூரன்ஸ் நிறுவன மூத்த துணைத்தலைவர் சமீர்பாவே, நிர்வாக துணைத்தலைவர் தயானந்தா ஷெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை கிளை மேலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட திட்ட அலுவலர் பழனி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், நாங்குநேரி தாசில்தார் வர்க்கீஸ் பிடிஓ கந்தசாமி, கருணாவதி, சிங்கநேரி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சங்கர் பண்ணையார், ஊராட்சி முன்னாள் தலைவர்கள் சிங்கநேரி ராஜேந்திரன், சிந்தாமணி ராமசுப்பு, சிங்கநேரி முன்னாள் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை சங்கரி நன்றி கூறினார்.
கல்வித்துறைக்கு பொறுப்பு
விழாவில் பேசிய கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இந்த பள்ளியை மேம்படுத்தும் பொறுப்பும் கடமையும் இக்கிராமத்தினருக்கும் கல்வித்துறைக்கும் உள்ளது. இங்கு படிக்கும் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள். ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் திறமை மூலம் இப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளுக்கு இடம் கேட்டு பெற்றோர் அதிகளவில் வரும் நிலையை ஏற்படுத்தவேண்டும். பள்ளியின் மேம்பாட்டிற்கு உதவிய இக்கிராமத்தினர் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.
COMMENTS