சென்னையில் பிரபல உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி உள்ளது எனக் கூறி, பணம் பறிக்க முயன்ற வடநாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
*🔳சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல உணவகமான முருகன் இட்லி கடைக்கு, கடந்த 9-ம் தேதி காலையில் வந்த வடமாநில இளைஞர் ஒருவர், இட்லி, மற்றும் தோசையை பார்சல் வாங்கியுள்ளார். தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் அவசர அவசரமாக கடைக்கு வந்த அந்த இளைஞர், சாம்பாரில் கரப்பான் பூச்சி இருப்பதாக கூறி காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை செல்போனில் பதிவும் செய்து கொண்டு, சமூக வலைதளங்களில் பதிவிட போவதாகவும் தெரிவித்துள்ளார். இச்செயலை செய்யாமலிருக்க, 5 லட்ச ரூபாய் பணத்தை தர வேண்டும், எனவும் உணவக உரிமையாளரை மிரட்டியுள்ளார்.*
*🔳பணம் பறித்திடும் நோக்கில் வந்ததை அறிந்த ஹோட்டல் நிர்வாகம், அவரிடம் சாதுர்யமாக பேசி, மூன்று லட்ச ரூபாய் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டு, மறுநாள் வரச் சொல்லியுள்ளனர். பின்னர் இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்து, அந்த இளைஞர் வரும்போது அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.*
*🔳இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞர் பெயர், மகேந்திரசிங் என்பதும், தாம்பரம் பகுதியில் இனிப்பு விற்பனையகத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக இதுபோன்று பிரபல உணவகங்களுக்கு சென்று, பார்சல் வாங்கி செல்லும் உணவில் கரப்பான் பூச்சி இருப்பதாக கூறி, பலமுறை ஏமாற்றி பணம் பறித்துள்ளதையும் கண்டறிந்தனர். தொடர்நது அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.*
COMMENTS