"சொத்துவரி உயர்வு என்கிற பெயரில் பொதுமக்கள், வணிகர்களிடமிருந்து கந்துவட்டி வசூலிக்க நினைக்கிறதா தமிழக அரசு?"
-பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.
-பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.
தமிழகம் முழுவதும் குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50சதவீதமும், வாடகைக்கு விடப்படும் குடியிருப்புகள் மற்றும் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு விடப்படும் கட்டிடங்களுக்கான சொத்து வரி 100சதவீதமும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களையும், சிறு, குறு, நடுத்தர வணிகர்களையும் கொதிக்கின்ற எண்ணைக் கொப்பரையில் தூக்கி போடுவதற்கு சமமாகும்.
கடந்த 20ஆண்டுகளாக தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக அரசுகள் இலவச தொலைக்காட்சி, இலவச மிக்சி, இலவச கிரைண்டர் என இலவசங்களுக்கு மக்களை அடிமைப்படுத்தி விட்டு, சொத்துவரியை படிப்படியாக உயர்த்தாமல் விட்டதின் விளைவாக தற்போது சென்னை "உயர்நீதிமன்றம் சாட்டையை சுழற்றியிருக்கிறது".சாராயக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டியதில் ஒருமடங்கு சொத்துவரி குறித்து தமிழக அரசு சிந்தித்திருக்குமானால் தற்போது நீதிமன்றம் சாட்டையை சுழற்ற வேண்டிய அவசியம் வந்திருக்காது. "சாராயக்கடை வருமானத்தை மட்டுமே நம்பி கோமாவில் சுயநினைவின்றி கிடந்த தமிழக அரசுஈ நீதிமன்றத்தின் தயவால் கண் விழித்து உடனே குருவி தலையில் பனங்காயை தூக்கி வைப்பது போல் மாத ஊதியம் பெறுவோர், சொற்ப வருமானத்தை மட்டுமே காண்போர் தலை மீது மிகப்பெரிய மலையை பெயர்த்து வைத்திருக்கிறது."
சொத்துவரி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது, அது காலத்தின் கட்டாயம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரேயடியாக "50% முதல் 100% வரை சொத்துவரி உயர்வு" என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள கூடியதல்ல.
உயர் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி அமுல் போன்ற காரணங்களாலும், ஆன்லைன் வர்த்தகத்தினாலும் சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் தங்களின் வணிகத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இன்னும் அந்த இழப்பில் இருந்து மீள்வதற்குள் "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போன்று அமைந்திருக்கிறது"தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு.
கிட்டத்தட்ட 100% வரை சொத்துவரியை உயர்த்துவதன் மூலம் சிறு, குறு, நடுத்தர வணிகர்களின் கடை வாடகை பல மடங்கு உயரும். அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் வாய்ப்புள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
மேலும் கடந்த 20ஆண்டுகளாக தமிழகத்தில் உயர்த்தப்படாத சொத்துவரியை ஒரேயொரு அறிவிப்பின் மூலம் பொதுமக்களிடமிருந்தும், வணிகர்களிடமிருந்தும் தமிழக வசூலிக்க நினைப்பது கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி வசூலிப்பதை விட மிக மோசமான உதாரணத்தை உருவாக்கி விடும்.
எனவே 50% முதல் 100% வரை சொத்துவரி உயர்வு என்கிற அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்து அதனை குறைந்தபட்சம் 20% எனவும், அதிகபட்சம் 30% எனவும் மாற்றியமைக்குமாறு தமிழக அரசை "தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்" சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
அன்புடன்
சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனர் & மாநில தலைவர்)
சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனர் & மாநில தலைவர்)
COMMENTS