இன்ஜி., கவுன்சிலிங்கில் முறைகேடின்றி பதிவு: உதவி மையத்தினருக்கு அண்ணா பல்கலை அறிவுரை
🔸🔹இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், மாணவர்களுக்கு குழப்பமின்றியும், முறைகேடுகளுக்கு இடமின்றியும் செயல்பட வேண்டும்' என, 42 உதவி மையங்களின் அலுவலர்களுக்கு, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
🔸🔹இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், இந்த ஆண்டு முதல், 'ஆன்லைன்' கவுன்சிலிங் அறிமுகமாகிறது. இதில், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குழப்பங்களை தீர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின், பொறுப்பாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழிகாட்டும் கூட்டம், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.
🔸🔹இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ்; தமிழ்நாடு பொது மாணவர் சேர்க்கை செயலர்,
பேராசிரியர் நாகராஜன் உள்ளிட்டோர், உதவி மையங்களின் பொறுப்பாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.
* உதவி மையங்களுக்கு வரும் மாணவர்களிடம், கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு தனியார் கல்லுாரிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது. விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதில், மாணவர்கள் சுதந்திரமான முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும்
* தகவல்களை, மாணவர்களே ஆன்லைனில் நிரப்பும் வகையில், அவர்களுக்கு உதவ வேண்டும்
* மாணவர்களின் சுய விருப்பம் அடிப்படையில் மட்டுமே, பதிவுகளை, அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். 'ஆன்லைன் சாய்ஸ் பில்லிங்' தொழில்நுட்ப முறை குறித்து சந்தேகம் கேட்டால், பொறுமையாக விளக்கம் தர வேண்டும்
* மாணவர்கள் தங்களின் குறியீட்டு எண் மற்றும் ரகசிய எண்ணை மறந்து விட்டால், அதற்கு சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தொழில்நுட்ப உதவி பெற்று, நிவர்த்தி செய்ய வேண்டும்
* விருப்ப பாடம் பதிவு செய்வது, பணம் செலுத்துவது, தோராய இட ஒதுக்கீட்டை மாணவர்கள் உறுதி செய்வது, இறுதியில் இட ஒதுக்கீட்டு உத்தரவை பெறுவது என, அனைத்து நிலைகளிலும், மாணவர்களுக்கு உதவி மைய ஊழியர்கள் உதவ வேண்டும்
* தனியார் ஏஜென்டுகள், கல்லுாரியினரை, உதவி மையங்கள் மற்றும் அதன் அருகில் அனுமதிக்க கூடாது
* மாணவர்களுடன், அவர்களது குடும்பத்தினர் அல்லது பெற்றோர் மட்டும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். உதவி மையங்களில், எந்த முறைகேடுக்கும் இடம் தரக்கூடாது. இவ்வாறு, அறிவுரைகள் வழங்கப்பட்டன
COMMENTS