பாராக மாறிய காந்தி அஸ்தி மண்டபம்....
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனை அருகே காந்தி அஸ்தி மண்டபம் உள்ளது. 1948ம் ஆண்டு இது கட்டப்பட்டது. மாநகராட்சி பொறுப்பில் உள்ள இந்த மண்டபத்தில் காந்தியின் பிறந்த தினம், நினைவு தினத்தில் அரசியல் கட்சிகள், பள்ளி, கல்லூரி மாணவி, மாணவிகள் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இன்று காலை தமாகா விவசாயிகள் அஞ்சலி செலுத்த சென்ற போது, மண்டபம் சுத்தமின்றி இருந்தது. மண்டபத்தை சுற்றிலும் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், தண்ணீர் காலி பாக்கெட்டுகள் கிடந்தன. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சுற்றுச்சுவரை தாண்டிக்குதித்து உள்ளே சென்று காந்தி அஸ்தி மண்டபத்தை குடிமகன்கள் சிலர் இரவு நேரங்களில் பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதன் அருகிலேயே புறக்காவல் நிலையம் இருந்தும் போலீசார் கண்டுகொள்வதில்லை.
நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காந்தியின் அஸ்தி மண்டபத்துக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை அருகில் உள்ள கோஅபிஷேகம் கோட்ட அலுவலக ஊழியர்கள் தான் இந்த மண்டபத்தை பராமரித்து வருகின்றனர். அவர்கள் முறையாக சுத்தம் செய்து பராமரிப்பதில்லை. எனவே முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். குடிமகன்கள் உள்ளே புகுவதை தடுக்க காவலாளி நியமிக்க வேண்டும் என்றனர். அஸ்தி மண்டபத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளரிடம் கேட்ட போது, இந்த அஸ்தி மண்டபத்தை வாரத்துக்கு 3 நாள் சுத்தம் செய்வேன். இரவில் குடிமகன்கள் பாராக பயன்படுத்துவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி போலீஸ் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
COMMENTS