வர்த்தக கூட்டமைப்புகள், தரச்சான்று நிறுவனங்களுடன் மார்ச் 26-ல் ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்த முடிவு
புதிய நிதி ஆண்டின் முதல் நிதிக் கொள்கை கூட்டத்தில் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க, முன்பாகவே இந்திய வர்த்தக கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தரச்சான்று நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 26-ம் தேதி இந்தக் கூட்டம் நடக்க உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடக்க உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டி விகித முடிவுகள், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.
வரும் ஏப்ரல் 4-ம் தேதி புதிய நிதி ஆண்டின் முதல் நிதிக் கொள்கை கூட்டம் நடக்க உள்ளது. அப்போது வட்டி விகிதத்தைக் குறைப்பதா வேண்டாமா, தொழில்துறையின் வளர்ச்சிக்கு என்னென்ன செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பது குறித்த முடிவுகளை எடுக்க முன்கூட்டியே இந்த ஆலோசனைக் கூட்டத்தை ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வங்கியாளர்கள், அனைத்திந்திய வங்கி டெபாசிட்தாரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலதரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் போது, அதன் முழு பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தருவதில்லை என்ற புகார்கள் அதிகரித்துள்ளதால், அதுகுறித்தும் விவாதிக்க உள்ளனர். 18 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது ரிசர்வ் வங்கி. ஆனால், வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வேண்டும் என்று தொழில்துறையும் வங்கிகளும் விரும்புகின்றன.
COMMENTS