பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம்வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவால் பட்டியல் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக தமிழக பாஜகதலைவர் தமிழிசையிடம் கேட்டபோது, "தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கும் தலா 3 பேர் கொண்ட பட்டியலை கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கேட்டுள்ளார். அதன்படி,பட்டியலை நாளை (மார்ச் 19) டெல்லியில் பாஜக ஆட்சிமன்றக் குழுவிடம் அளிக்க இருக்கிறோம். அந்தப் பட்டியலில் இருந்து வேட்பாளர்களை கட்சியின் தேர்தல் குழு நாளை அல்லது நாளை மறுநாள் (மார்ச் 20) வெளியிடும்" என்றார்.
கன்னியாகுமரியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கையில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, கோவையில் முன்னாள்மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அல்லது மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், ராமநாதபுரத்தில் மாநில துணைத்தலைவர் குப்புராமு, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
COMMENTS