தமிழக- ஆந்திர எல்லையில் 57 கோடி ரூபாய் தங்கக் கட்டிகள் பறிமுதல்
தமிழக-ஆந்திர எல்லையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 57 கோடி ரூபாய் மதிப்பிலான 175 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக-ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில், ஆந்திராவில் இருந்து சென்னையை என்று நோக்கி சென்ற மினிவேனை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 175 தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட தங்கக் கட்டிகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி பார்வையிட்டார்.
ஆந்திர மாநிலம் தடா ஸ்ரீ சிட்டி பகுதியில் உள்ள சித்தாத் என்ற தனியார் தங்கம் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 175 தங்க கட்டிகளில் 74 கிலோ சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள நகை கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்தது தெரிய வந்தது.
மீதமுள்ள 100 கிலோ தங்க கட்டிகளை விமானம் மூலம் மும்பைக்கு எடுத்து செல்லவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆவணங்களின்படி 175 தங்க கட்டிகள் இருப்பதும், அவற்றின் மார்க்கெட் மதிப்பு 57 கோடி எனவும் உதவி தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
தங்க கட்டிகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு, வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
COMMENTS