கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 23-வது இடத்தில் உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்த உள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 7800 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் இருந்து கேரளாவிற்கு வந்த கேரள மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. யுகான் பல்கலைகழகத்தில் படித்து வந்த மாணவர் சமீபத்தில் நாடு திரும்பி உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த சவுத்ஹாம்ப்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு நடைபெறும் விமானம் உள்ளிட்ட பயணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் 30 நாடுகளில் அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் தாய்லாந்து முதலிடத்திலும், இதற்கு அடுத்த இடத்தில் ஜப்பான், ஹாங்காங் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா ஆறாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 10வது இடத்திலும், பிரிட்டன் 17வது இடத்திலும், இந்தியா 23வது இடத்திலும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்படும் நகரங்கள் பட்டியலில் தாய்லாந்தின் பாங்காக் முதலிடத்தில் உள்ளது. ஹாங்காங், தைவானின் தைபே அதற்கடுத்த இடங்களில் உள்ளன.
COMMENTS