சொத்து வரி செலுத்தாததால் 2வது முறையாக வணிக வளாகம் முன்பு குப்பை லாரி நிறுத்தம் : மாநகராட்சி நடவடிக்கை
பெரம்பூர் : பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஸ்பெக்ட்ரம் மால் எனும் தனியாருக்கு சொந்தமான ஷாப்பிங் மால் மற்றும் கடைகள் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகம் மற்றும் திரையரங்கத்தின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு 1.5 கோடிக்கு அதிகமாக சொத்து வரி செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், கடந்த மாதம் 29ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் இந்த வணிக வளாகம் முன்பு குப்பை லாரிகளை நிறுத்தி, வரி பாக்கியை செலுத்தும்படி எச்சரித்தனர். மேலும், வணிக வளாகம் முன்பு நோட்டீஸ் ஒட்டினர் அதுமட்டுமின்றி, சொத்து வரி கட்டவில்லை என்றால் வணிக வளாகத்திற்கு சீல் வைப்போம் என எச்சரித்தனர். அதன்பின்பு அந்த வணிக வளாகம் சார்பில் 1 கோடி வரை சொத்து வரி செலுத்தப்பட்டது. மீதமுள்ள தொகையை விரைவில் செலுத்துவதாக உறுதியளித்தனர். ஆனால், அதன்படி செலுத்தவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சி 6வது மண்டல அதிகாரி நாராயணன் உத்தரவின் பேரில் உதவி வருவாய் அலுவலர் லட்சுமண குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அந்த வணிக வளாகம் முன்பு நேற்று 2வது முறையாக குப்பை லாரிகளை நிறுத்தி அந்த வணிக வளாகத்திற்குள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு பாதையை மூடினர்.
COMMENTS