வேளாண்மை செய்திகள் - காய்கனி சந்தைகளுக்கு 2 நாள் தடை..!
#வேளாண்மை செய்திகள்..!
#பருவமழைக்கு முந்தைய விதைப்புப் பணிகள் நாடு முழுவதும் தற்போது துவங்கியுள்ளது. இதில் நெல் விதைப்புப் பரப்பு 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 32.58 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் விதைக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போதைய கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில், இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது யூரியா உரம் 2505 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1733 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2270 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3283 மெட்ரிக் டன் உரங்கள் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள், காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விற்பனை நிலையங்களுக்கு வரும் விவசாயிகளின் பாதுகாப்பிற்கு தேவையான கிருமி நாசினிகள் வைத்திடவும், குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தனிநபர் இடைவெளி அவசியம் கடைபிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், உரம் வாங்க வரும் விவசாயிகள் உடனுக்குடன் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து உடன் கலைந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தங்கள் சாகுபடி பயன்பாட்டிற்கான உரங்களை தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஆதார் அட்டையினை பயன்படுத்தி விற்பனை முனையக் கருவி மூலம் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
#கோவை மாவட்டத்தில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள், கண்டிப்பாக சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டும், என கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
#திருச்சி மாநகராட்சியில் இயங்கும் தற்காலிக காய்கனி சந்தைகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஏப்ரல் 11, 12) தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
#கள்ளக்குறிச்சி பகுதியில் காய்கறி மற்றும் பழங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டால் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
#சேலம் மாவட்டத்தில், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், 5,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தன.
#கம்பம் பள்ளத்தாக்கில் மா அறுவடை துவங்கியது. பெரும்பாலான பகுதியில் சராசரி மகசூலே கிடைத்துள்ளது. எனினும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
COMMENTS