சமையல் காஸ் தேவை 40 சதவீதம் அதிகரிப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து கடந்த 14ம் தேதி வரை அமலில் இருந்த 21 நாள் ஊரடங்கு, தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து முடங்கியதால் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை 70 சதவீதம் சரிந்துள்ளது. அதேநேரத்தில், சமையல் காஸ் தேவை கிடு கிடுவென அதிகரித்துள்ளது.
இந்த மாதம் முதல் வாரத்தில் மட்டும், சமையல் காஸ் தேவை, முந்தைய ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் சப்ளை செய்வதற்காக, இந்த மாத துவக்கத்தில் மேற்கண்ட எண்ணெய் நிறுவனங்கள் 7,37,000 டன் சமையல் எரிவாயு வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளன.
இதனால், சமையல் எரிவாயுவுக்கான விலையும் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.
வீடுகளில் சமையல் அதிகரித்துள்ளதால் பயன்பாடு உயர்ந்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் காஸ் இணைப்பு பெற்றவர்கள் பலர் சமையல் காஸ் பயன்படுத்துவதை விட்டு விட்டனர்.
ஆனால், தற்போது அவர்களுக்கு இலவச சமையல் காஸ் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் தேவை அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
COMMENTS