பட்டினி சாவுகள் கூடும்: ஐ.நா., சபை எச்சரிக்கை
நியூயார்க் :'உலகின் பணக்கார நாடுகள், ஐ.நா., சார்பு நிறுவனங்களுக்கான நிதி உதவியை நிறுத்தினால், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள், பட்டினியால் உயிரிழக்க நேரிடும்' என, ஐ.நா., எச்சரித்துள்ளது.
இது குறித்து, ஐ.நா.,வின் உணவுத் திட்ட தலைவர் டேவிட் பெய்ஸ்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகம் முழுதும், 82 கோடி மக்கள், தினமும் இரவு உணவின்றி, பட்டினியுடன் உறங்குகின்றனர்.
மேலும், 14 கோடி மக்கள், பல்வேறு நெருக்கடி நிலை காரணமாக, பட்டினி கிடக்கும் நிலையில் உள்ளதாக, உலக உணவுத் திட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு காரணமாக, மேலும், 13 கோடி மக்கள், இந்த ஆண்டு இறுதிக்குள், பசி மற்றும் பட்டினியால் கடும் பாதிப்புகளை சந்திப்பர் என, அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
உலகில் உள்ள, 10 கோடி மக்களுக்கு, உணவு திட்டத்தின் கீழ், தினமும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மூன்று கோடி பேர், இந்த உணவை மட்டுமே நம்பி உயிர் வாழ்கின்றனர்.
அந்த மூன்று கோடி மக்களுக்கு, உணவு சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள், நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் பேர், பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலை உருவாகும்.
ஐ.நா.,வின், உலக உணவு திட்டத்துக்கு, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற பணக்கார நாடுகள், நிதி உதவிகள் அளித்து வருகின்றன.
கொரோனா பாதிப்பால், இந்த பணக்கார நாடுகளின் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக, உலக உணவுத் திட்டத்துக்கான நிதி உதவிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டால், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், பாதிக்கப்பட்ட பல நாடுகளில் வசிக்கும் மக்கள், பசி மற்றும் பட்டினியால் வாடும் நிலை உருவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
COMMENTS