ஊரடங்கு முடிந்த பிறகும் மதுவிலக்கு தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கால் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கால் பல நன்மைகளும் விளைந்துள்ளதாகவும், அதில் முதன்மையானது மது பிரியர்கள் மதுவை மறந்திருப்பதுதான் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த 39 ஆண்டுகளாக தான் போராடி வருவதாகத் தெரிவித்துள்ள ராமதாஸ், ஊரடங்கால் தற்போது அது நிறைவேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மது இல்லாமல் மக்களால் வாழ இயலும் என்று தெரிவித்துள்ள ராமதாஸ், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றின் மூலம் நிச்சயம் அது சாத்தியப்படும் என கூறியுள்ளார்.இதுநாள் வரை ஆட்சி செய்தவர்கள் மதுக்கடைகளை மூடாமல் கபட நாடகம் ஆடியதாக விமர்சித்துள்ள அவர், மதுவிலக்கை அமல்படுத்துவதன் மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் வரலாற்றில் இடம் பெறும் என்று தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டால் ஒன்றரை கோடி குடும்பங்கள் நிம்மதியாக வாழும் என தெரிவித்துள்ள ராமதாஸ், அதோடு, தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும் என்றும், வறுமை விலகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.*
COMMENTS