புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "மத்திய அரசு உத்தரவு அடிப்படையில் புதுச்சேரியில் கோயில், மசூதி, தேவாலயங்கள் மூடப்பட்டன. வீட்டிலேயே கடவுளை வழிபட வேண்டும் என புதுவை அரசு சார்பில் கேட்டுக் கொண்டோம். மக்கள் கடந்த 2 மாதங்களாக கோயில், மசூதி, தேவலயங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே கடவுளை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், இந்துக்கள் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்க வேண்டும். கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரர்த்தணை செய்ய வேண்டும். இஸ்லாமியர்கள் மசூதிகளில் தொழுகை செய்ய வேண்டும்.
சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து இறைவனை வழிபட மக்கள் தயார் நிலையில் உள்ளனர். எனவே, ஜூன் 1 ஆம் தேதி முதல் கோயில், மசூதி, தேவாலயங்களை திறந்து மக்கள் இறைவனை வழிபட மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என கூறியுள்ளேன். இதனை பிரதமர் பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் விட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சாரமானது மத்திய, மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. இதனை முடிவு செய்வதற்கு மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. இதனால் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.
ஆனால் புதுச்சேரியும், டெல்லியும் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசங்களாகும். புதுச்சேரியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழைய எளிய மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தில் சலுகையும் அளித்து வருகிறோம். ஆனால், மத்திய அரசு யூனியன் பிரதேசங்களுக்கு போட்ட சட்டத்தை புதுச்சேரியிலும் திணிக்க பார்க்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
புதுச்சேரியை பொறுத்தவரை இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அதற்கு மாநிலங்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால், புதுச்சேரி மாநிலம் ஏற்றுக் கொள்ளாது. நாங்கள் தெளிவாக உள்ளோம். எக்காரணத்தை கொண்டும் புதுச்சேரி மின்துறையை நானோ, அமைச்சர்களா, எம்எல்ஏக்களோ தனியார் மயமாக்க ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இதுசம்பந்தமாக சட்டப்பேரவையில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.மத்திய அரசு மக்கள் உணர்வுகளையும், மாநில அரசு உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். மின்துறை மக்களுக்கு சேவை செய்யும் துறையாக உள்ளதே தவிர லாபம் ஈட்டும் துறையாக இல்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை திமுக எதிர்க்கிறது. ஆகவே, நாங்கள் உங்கள் அரசுடன் துணை நிற்கிறோம் என்று எழுதியுள்ளார். அவருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மாநிலங்கள் விரும்பாவிட்டால் மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெளிவுபட கூறியிருக்கிறார். மின்சாரத்தை தனியார் மயமாக்கினால் புதுச்சேரியில் விவசாயிகள், ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், தொழிற்சாலை வருவதும் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்குவதை நாங்கள் முழுமையாக எதிர்ப்போம்.
காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்குவதற்கான வேலையை ஒரு சிலர் செய்து வருகிறார்கள். கொரோனா தொற்று உள்ள இந்த சமயத்தில் நானும், அமைச்சர்களும், எம்எல்எக்களும் இரவு பகல் பார்க்காமல் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம். மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. மாநில வருவாய் குறைந்துவிட்டது. அப்படி இருந்தாலும் கூட அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம், பென்ஷன் கொடுத்து வருகிறோம். இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்றுகிறோம். ஆளுநர் கிரண்பேடி தலையீட்டால் இலவச அரிசி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த தடையையும் மீறி அதனை செய்ய உள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் முதல் மஞ்சள் அட்டை தாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்க உள்ளோம்.
ஆனால், சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையில்லாமல் அறிக்கை விடுவதும், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பதும் மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. இது அரசியல் செய்யும் நேரமில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து அரசோடு பாடுபட வேண்டும். மக்களின் உயிர் முக்கியம். புதுச்சேரி பொருளாதாரம் முக்கியம்.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அரசு செய்யும் காரியங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது மற்ற அரசியல் கட்சிகளின் வேலை. ஆனால், அதனை எல்லாம் தவிர்த்து அரசை விமர்சிப்பது, அரசுக்கு எதிராக அறிக்கை விடுவது, விவரம் தெரியாமல் பேட்டி கொடுப்பதெல்லாம் விந்தையாக உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும்.
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும், வருமானத்தை பெருக்கவும், வருகின்ற நிதியை முறையாக செலவு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவரம் தெரிந்த அரசியல் கட்சிகள் நிறைய உள்ளன. ஆனால், ஒரு சிலர் கட்சி தலைமையின் அனுமதியில்லாமல் தேவையில்லாமலும், ஆதாரமில்லாமலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி இடையே பிளவு ஏற்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்கள். இது பலிக்காது, தவிடு பொடியாக்கப்படும். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் இந்த அறிக்கை விடுவது யார், அவர்களுடைய பின்னணி என்ன? என்று தெரியும். நாங்கள் தொடர்ந்து எங்கள் கடமையை செய்வோம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
COMMENTS