சென்னை, மே.30–-
தமிழகத்தில் நேற்று மட்டும் 874 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–-
தமிழகத்தில் நேற்று 733 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 141 பேரும் என இதுவரை இல்லாத அளவுக்கு 874 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மராட்டியத்தில் இருந்து வந்த 135 பேரும், கேரளாவில் இருந்து வந்த 3 பேரும், மேற்கு வங்காளம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவரும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களில் 518 ஆண்கள். 356 பெண்கள் ஆவார்கள்.
தமிழகத்தில் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது. இதில் 12 ஆயிரத்து 737 ஆண்களுக்கும், 7 ஆயிரத்து 504 பெண்களுக்கும், 3–-ம் பாலினத்தவர்கள் 5 பேரும் அடங்குவர்.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 776 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 11 ஆயிரத்து 313 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழக மருத்துவமனையில் 6 ஆயிரத்து 269 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 86 வயது, 85 வயது, 63 வயது, 32 வயது ஆண்களும், 70 வயது, 66 வயது, 58 வயது பெண்களும், செங்கல்பட்டை சேர்ந்த 77 வயது ஆணும், திருவள்ளூரை சேர்ந்த 62 வயது பெண்ணும் அடங்குவர். தமிழகத்தில் இதுவரையில் 154 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 15 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு 618 பேரும், செங்கல்பட்டில் 61 பேரும், திருவண்ணாமலையில் 48 பேரும், கள்ளக்குறிச்சியில் 19 பேரும், நெல்லையில் 15 பேரும், காஞ்சீபுரத்தில் 12 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், கடலூரில் 5 பேரும், அரியலூரில் 3 பேரும், விருதுநகர், விழுப்புரம், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12 வயதுக்கு உட்பட்ட 44 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 84 முதியவர்களும் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதுவரையில் 12 வயதுக்கு உட்பட்ட 1,203 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,806 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் என 71 ஆய்வகங்கள் மூலம் இதுவரை 4 லட்சத்து 66,550 பரிசோதனைகள் நடை பெற்றுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 11,334 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 13,362 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS