சென்னை, மே 29
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும் என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.
COMMENTS