புதுடெல்லி, மே.30-–
4–-வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் குறித்து தேவைக்கேற்ப மாநிலங்களே முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25–-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
4–-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 799 ஆகவும், உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 4,706 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின.
இதனால் நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. என்றாலும் பஸ், ரெயில்கள் ஓடாததால் மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய இருப்பதால், அது மேலும் நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும்? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்து உள்ளன.
இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மாநில முதல் அமைச்சர்களை தொலைபேசியில் தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு விவாகாரத்தில் அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தார். எந்தெந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்பது பற்றிய அவர்களுடைய யோசனைகளையும் கேட்டார்.
அப்போது, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்றும், மற்ற பகுதிகளில் மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வழிவகுக்க வேண்டும் என்றும் பெரும்பாலான முதல்அமைச்சர்கள் யோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுவரை, ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தான் மாநில முதல்- அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அமித்ஷாவும் அவருடன் இருந்துள்ளார். இந்த தடவை முதன் முதலாக அமித்ஷா தொலைபேசி மூலம் முதல் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
அமித்ஷாவுடன் பேசிய பின் கோவா முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அமித்ஷா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது மாநில முதல்- அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளை அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார். அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது? என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து அவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.
கொரோனா பாதிப்பு எப்போது முடியும் என்று தெரியாத நிலை உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை முழுமையாக நீக்கிவிட்டால் கொரோனா சமூக பரவலாக மாறி உயிர் இழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கிறது.
எனவே நாட்டில் தற்போது உள்ள நிலவரப்படி கொரோனா பரவல் அதிகமாக உள்ள நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படலாம் என்றும், மற்ற பகுதிகளில் தளர்வுகள் குறித்து தேவைக்கேற்ப மாநிலங்களே முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்படும் என தெரிகிறது.
இதுபற்றி மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஜூன் 1-–ந் தேதி முதல் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை விதிப்பது, தளர்த்துவதில் மத்திய அரசின் பங்கு அதிகம் இருக்காது என்றும், உள்ளூர் சூழ்நிலையை பொறுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே இந்த விஷயத்தில் முடிவு எடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இனி 15 நாட்களுக்கு ஒருமுறை ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், கட்டுப்பாடுகள், தளர்வுகள் பற்றி மாநிலங்கள்தான் தீர்மானிக்கவேண்டி இருக்கும் என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கும், அரசியல் கூட்டங்களுக்கும் மற்றும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்களை திறக்கவும் இருந்து வரும் தடையை மத்திய அரசு தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது.
பள்ளிகளை திறப்பது, மெட்ரோ ரெயில்களை இயக்குவது பற்றி முடிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கே வழங்கப்படும் என்று தெரிகிறது.
சமூக இடைவெளியை பின்பற்றி ஓட்டல்கள் செயல்பட அனுமதி வழங்கப்படலாம்.
சர்வதேச விமான சேவைக்கு தொடர்ந்து தடை நீடிக்கும். பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது. திரையரங்குகள், வர்த்தக வளாகங்கள், உடற்பயிற்சிக்கூடம், மதுபான கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
COMMENTS