இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை
ஜூலையில் பொதுத்தேர்வு முடிவுகள்
- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
சென்னை, மே 30–
தமிழகத்தில் 10, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும். இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று கோபியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்தக் குழப்பமும் வேண்டாம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று தான் கூறினேன்.
படித்த பள்ளியிலேயே தேர்வு
தற்போது கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டும்தான் கல்வி கற்றுத் தர முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க எந்தத் தடையும் இல்லை. மாணவர்கள் எந்தப் பள்ளிகளில் படித்தார்களோ அந்தப் பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம் என்றார்.
பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்த பின் பாடங்கள் குறைப்பு பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
COMMENTS