ஸ்டாலினுக்காக தனி விமானம்! மத்திய அரசிடம் கோரிக்கை!
ஸ்டாலினுக்காக தனி விமானம்! மத்திய அரசிடம் கோரிக்கை!
திமுக தலைவர் வருடா வருடம் லண்டன் பயணம் மேற்கொள்வதையும், அதை ஒவ்வொரு முறையும், ‘ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்’ என்று தலைப்பு வைத்து செய்தி வெளியிடுவதையும் 2010 முதலே ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றன.
திமுக தலைவர் வருடா வருடம் லண்டன் பயணம் மேற்கொள்வதையும், அதை ஒவ்வொரு முறையும், ‘ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்’ என்று தலைப்பு வைத்து செய்தி வெளியிடுவதையும் 2010 முதலே ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றன.
ஸ்டாலினின் லண்டன் பயணம் மருத்துவ சிகிச்சையை அடிப்படையாகக் கொண்டது என்று தகவல்கள் வந்தபோதிலும் கூட எதிர்க்கட்சிகள் அதைத் தொடர்ந்து விமர்சித்தே வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சட்டமன்றக் கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பிறகு சட்டமன்றம் முடிந்ததும் ஸ்டாலின் தனது லண்டன் பயணம் அமையுமாறு பார்த்துக் கொள்கிறார்.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி லண்டன் புறப்பட்டார் ஸ்டாலின். அதேபோல 2018 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். கடந்த 2019 ஆம் அவர் லண்டன் செல்லவில்லை. மாறாக ஜூன் 14 ஆம் தேதி சிங்கப்பூர் சென்றார்.
ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பயணம் மேற்கொண்டாலும் இதற்கான ஏற்பாடுகளை மூன்று மாதங்கள் முன்பே ஸ்டாலின் தரப்பினர் செய்து விடுவார்கள். அப்படித்தான் இந்த வருடமும் முன்கூட்டியே லண்டன் பயண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர் ஸ்டாலின் தரப்பினர். ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளிலும் பரவி, இந்தியாவையும் தற்போது உலுக்கிக் கொண்டிருக்கிறது.
இங்கிலாந்தில் இன்னும் கொரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை. மொத்தம் ஐந்து நிலைகளாக அங்கே கொரோனா வைரஸின் தாக்கம் வகுக்கப்பட்டிருக்கிறது. இப்போது நான்காவது நிலையில் இருந்து மூன்றாவது நிலை என்பதை நோக்கி நகர்ந்திருக்கிறது. அதாவது மூன்றாவது நிலைப்படி, ‘virus is in general circulation' என்ற சமூகப் பரவலில் இருந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் உள்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் மெல்ல மெல்ல செய்யப்படுகிறதே தவிர, வெளிநாட்டு விமானங்களை அனுமதிப்பதில் இங்கிலாந்து கடுமையாகவே உள்ளது.
நேற்று (ஜூன் 20) செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரி, “சர்வதேச விமானப் போக்குவரத்து என்பதை பிறநாடுகளின் நிலையை வைத்தே உறுதி செய்ய முடியும். இப்போது அவரவர் நாட்டினரை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வரும் பயணங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என்று சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில் சர்வதேச விமானப் போக்குவரத்து என்பது இப்போதைக்கு இயலாத நிலையில் மருத்துவ சிகிச்சைக்கான லண்டன் பயணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அதேநேரம் லண்டனில் தான் செல்லும் மருத்துவமனையிடம் சிறப்பு அனுமதி பெற்று, மத்திய அரசிடம் தனி விமானப் பயணத்துக்காக அனுமதி பெறுவதிலும் ஸ்டாலின் தரப்பினர் ஈடுபட்டிருக்கிறார்கள். ஸ்டாலின் தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இப்பதவி என்பது மாநில அமைச்சர் அந்தஸ்திலானது. இந்த அடிப்படையில் ஒரு மாநில அமைச்சருக்குரிய உரிமையில் தனி விமானப் பயணம் மேற்கொள்வதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், ஸ்டாலின் அனுமதி கேட்டிருப்பதாக திமுக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இந்த கோரிக்கை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு ஸ்டாலின் தனி விமானத்தில் லண்டன் செல்ல அனுமதி அளிப்பது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்துகொண்டிருக்கிறதது.
COMMENTS