கொரோனாவில் இருந்து குணமடைந்தார் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜபாளையம் தொகுதி, திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் குணமடைந்து வீடு திரும்பினார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கப்பாண்டியன். இவர் திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் தன் தொகுதியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சில அறிகுறிகள் காணப்பட்டது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், எம்.எல்.ஏ. மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் தங்கப்பாண்டியன் மீண்டும் தனது ரத்த மாதிரியைப் பரிசோதனைக்கு அனுப்பினார். அதில் தங்கப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த தங்கப்பாண்டியன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து தங்கப்பாண்டியனிடம் கேட்டபோது, ‘’ஜூலை 14-ஆம் தேதி, எனது ரத்த மாதிரியைப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தேன். ஏழு நாட்களுக்குப் பிறகே ரிசல்ட் வந்தது. ஜூலை 22-ம் தேதி கொரோனா ‘பாசிடிவ்’ என ரிசல்ட் வந்தது. இதையடுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்து, தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன். தலைவர் ஸ்டாலின் தினமும் எனது உடல்நலனை கேட்டறிந்தபடியே இருந்தார்.’’ என்றார் அவர்
COMMENTS