கணவர் மர்மச் சாவு குறித்து விசாரணை நடத்த கோரிய மனைவி, 2 மகன்கள் விபத்தில் பலியானதால் சந்தேகம்
கிருஷ்ணகிரி: கணவர் இறந்ததற்கு விசாரணை கேட்டு மனு அளித்த பெண், அவரது இரு மகன்கள் விபத்தில் இறந்தது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே சீலேப்பள்ளியை சேர்ந்தவர் ஜமுனா, 35. இவர் மகன்கள் வேல்முருகன், 11, வெங்டேஷ், 8; மூத்த மகன் ஆறாம் வகுப்பும், இளைய மகன் நான்காம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் மூவரும் நேற்று காலை, 7:00 மணிக்கு டி.வி.எஸ்., ஸ்கூட்டி மொபட்டில், சீலேப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஸ்கூட்டியை ஜமுனா ஓட்டி வந்தார். வேப்பனஹள்ளி சாலையில், தளவாய்ப்பள்ளி அருகே வந்த போது, சின்னகொத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் ஓட்டி வந்த ஈச்சர் லாரி, ஜமுனாவின் ஸ்கூட்டி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஜமுனா, வெங்கடேஷ் ஆகியோர் இறந்தனர். பலத்த காயமடைந்த வேல்முருகன், பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குருபரப்பள்ளி போலீசில், லாரி டிரைவர் ஸ்ரீதர் சரணடைந்தார். இறந்த ஜமுனாவின் கணவர் முருகேசன், 38; ஓசூரில் உள்ள டைட்டன் நகை தயாரிக்கும் நிறுவனத்தில், சமையலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த, 16ல் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டும் என, ஜமுனா கடந்த, 24ல் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதரிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று லாரி மோதி ஜமுனா மற்றும் அவரது இரு மகன்கள் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து எதிர்பாராமல் நடந்ததா அல்லது ஏற்படுத்தப்பட்டதா என்று போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று, ஜமுனாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
COMMENTS