மழைநீரில் தெரியாத பாதாள சாக்கடை: 5 மணி நேரம் வாகன ஓட்டிகளை எச்சரித்த பெண்மணி
மும்பையில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை இருப்பதை 5 மணி நேரமாக நின்று எச்சரித்த பெண்மணியின் தன்னலமற்ற செயல் சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
மும்பையில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளிலும் மழை நீர் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இதன் காரணமாக மும்பையில் ஒரு சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடப்படாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதைக் கவனித்த பெண்மணி ஒருவர் பாதாள சாக்கடை அருகிலேயே சுமார் 5 மணி நேரம் நின்று வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளார்.
ஆறுபோல் ஓடும் மழை நீரால் கண்களுக்குத் தெரியாத இந்த பாதாள சாக்கடைக்குள் வாகன ஓட்டிகள் யாரும் விழுந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இவர் செய்த இந்த தன்னலமற்ற செயல் இணையத்தைக் கவர்ந்துள்ளது. இந்த விடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேற்கு மும்பைப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிகிறது.
COMMENTS