விமானம் விபத்துக்குள்ளாகும் முன் மீண்டும் பறக்க முயற்சித்திருக்கலாம் - மூத்த விமானி கருத்து
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட விமான விபத்தின் போது விமானம் விழுவதற்கு கடைசி நொடியில் விமானிகள் மீண்டும் புறப்பட முயற்சித்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளான புகைப்படங்கள் குறித்தும், விமானிகள் இருக்கும் காக்பிட் எனப்படும் அறை ஆகியவை குறித்து இந்திய விமானத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த விமானி ஒருவர், காக்பிட்டின் சிதைவுகள் முழுமையாக முன்னோக்கி நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலை டேக் ஆஃப் அல்லது கோ ரவுண்ட் என்று கூறியுள்ள அவர், அதாவது விமானம் விழுந்துவிடும் என்று தெரியவரும் கடைசிகட்ட நொடியின் போது விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி பறக்க வைக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
இதேபோல் விமானத்தின் இறக்கைகளில் மேல்புறத்தில் உள்ள பேனல்களும் விமானம் மேல் எழும்பும் போது அல்லது பறக்கும்போது இருப்பதைப் போன்று காணப்படுவதாகவும் அந்த விமானி கூறியுள்ளார்.
கடைசி நொடியில் விமானிகள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதால் மங்களூரில் ஏற்பட்டது போல விமானம் தீப்பிடிக்காமல் தப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
COMMENTS