அரசு உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள இந்து முன்னணியினரைக் கைது செய்யத் தடையில்லை.
_ உயர்நீதிமன்றம்.
கொரோனா வைரஸ் பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் அரசு தடையை மீறி நடந்தால் கொரோனா வேகமாக பரவுவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படும். எனவே இந்து முன்னணியினர் தமிழகம் முழுக்க ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விநாயகர் சிலைகளை நிறுவி அதை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அரசு உத்தரவை மீறும் இந்து முன்னணியினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் மூத்த பத்திரிக்கையாளர் V.அன்பழகன், ரிட் மனு சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது
கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்தி என்பது வீடுகளில் சிறிய அளவில் களிமண்ணால் விநாயகர் பொம்மையை வைத்து, தின்பண்டங்களை படைத்து வழிபடுவது வழக்கம் என்றும் கடந்த சில ஆண்டுகளாக அதிகமான அளவு கொண்ட விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் பெயிண்ட், வார்னிஷ் மற்றும் இதர வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பல இடங்களில் வைக்கப்பட்டு பின்பு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை அறிவுறுத்தியும் இந்து அமைப்பினர் கேட்பதில்லை.
இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலையில் அரசு சொன்னபடி விநாயகர் சிலைகளை கடலில் கரைத்து விட்டு பின்பு மாலையில் ஊர்வலம் செல்லக்கூடாது என்று அரசு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊர்வலமாக வலம் வருவதும், சம்பிரதாயத்திற்காக அவரையும் அவர் கூட்டத்தாரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவதும், பின்பு அவர்களை விடுவிப்பதும் ஆண்டுக்காண்டு வாடிக்கையாக நடந்து வருகிறது. அவர் மீது போடப்பட்ட வழக்குகளில் இன்றுவரை குற்றப்பத்திரிகையினை போலீசார் தாக்கல் செய்ததில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவி மக்களின் வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா கிருமி பரவுவதை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதனால் விழாக்களில் பொதுமக்கள் கூடக் கூடாது என்ற வகையில் அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் ரம்ஜான் மற்றும் பக்ரீத் தொழுகை, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பிரார்த்தனை ஆகியவை கூடாது என்று அரசு தடை விதித்தது. அதுமட்டுமின்றி பெரிய கோயில்கள், ஆடித்திருவிழா மற்றும் சித்திரைத் திருவிழா போன்ற விழாக்கள் நடைபெறவும் அரசு தடை விதித்தது.
கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி நடைமுறையில் இருந்து வந்த ஊரடங்கு உத்தரவினை அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அரசு தனது சுற்றறிக்கையில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதும், பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி தடை செய்தும் உத்தரவும் பிறப்பித்தது. ஆனால் இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் மற்றும் அதன் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் அரசு விதித்துள்ள தடையை மீறி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இடங்களில் விநாயகர் சிலையை நிறுவுவோம் என்றும் அதை தொடர்ந்து ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்போம் என்றும் பேட்டி கொடுத்துள்ளார்கள்.
இது சம்பந்தமாக மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை இயக்குநருக்கு 14.02.2020 அன்று மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் விமர்சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட இருவரின் அறிவிப்பு தமிழ்நாட்டில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக வேகமாக பரவிட வழிவகுத்துவிடும்.
மேலும் பொதுமக்களிடம் விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கு பெரிய அளவில் நன்கொடை வசூலிப்பதும் கொடுக்க மறுக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை “விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் நீங்கள் பயங்கரமான விளைவுகளை அனுபவிப்பீர்கள்” என்று மிரட்டி வருகிறார்கள். இதை தடுக்க வேண்டிய அரசும் இதனை கண்டும் காணாமல் இருக்கிறது. எனவே அரசு விதித்துள்ள தடைகளை மீறி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என்று பேட்டி கொடுக்கும் இந்து முன்னணியினரை முன்கூட்டியே கைது செய்து கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமலும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் S. குமாரதேவன் ஆஜரானார். கோவிட் - 19 சூழலில் 1,50,000 விநாயகர் சிலைகளை பொது இடத்தில் நிறுவதும் ஊர்வலமாகச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப் போவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் பேட்டி கொடுப்பது அரசுக்கு சவாலாக உள்ளது என்றும், அப்படி அனுமதிப்பது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவதோடு கோவிட் 19 பரவ வழிவகுப்பதால் தடைசெய்ய வேண்டும் என்று வாதிட்டார்.அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி 14 - 08-2020 GO.418 இது சம்பந்தமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அரசு உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளதால் மேற்கண்ட உத்தரவை மீறுபவர்கள் மீதுஅரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி வழக்கினை முடித்து வைத்தனர்.
COMMENTS