கர்வம்.
அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது.
அங்குள்ள பொந்து ஒன்றில் வசித்த எலியைக் கண்டதும்,
இரண்டும் பேசிப் பழகின. சிறந்த நண்பர்கள் ஆனார்கள்.
இருந்தாலும் எலி தற்பெருமை அடித்துக் கொள்ளும்.
நான் மிகவும் வலிமையானவன். மண்ணையே துளைத்து வளை அமைத்துவிடுவேன்.
என்னை யாறாலும் ஒன்றும் செய்யமுடியாது.
பாம்பைக்கூட விரட்டியடித்து விடுவேன்.’ என்று வீண் பெருமை பேசும்.
ஒருநாள் எலியும்,
குதிரையும் கொஞ்சம் தூரத்தில் சென்று மேய்ந்து வர முடிவு செய்தன.
இரண்டும் பேசிக்கொண்டு நடந்தன.
அப்போது,
‘நான்தான் உன்னை வழி நடத்தி செல்வேன்.
நான் சண்டையில் அவனை வீழ்த்தியிருக்கிறேன்,
இவனை வீழ்த்தியிருக்கிறேன்’
என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே முன் சென்றது எலி.
திடீரென்று எலி நின்றது.
‘ஏன் நின்றுவிட்டாய்? தொடர்ந்து செல்’ என்றது குதிரை.
‘உனக்கு கண் சரியாக தெரியாதா? எதிரே பார் ஆறு ஓடுகிறது, எப்படி கடப்பது?’ என்று கேட்டது எலி.
‘அது ஆறா? சிறிய கால்வாய் தானே இது. எளிதாக கடந்துவிடலாம்’ என்றது குதிரை.
‘குதிரையே இது கால்வாயா? எனக்கு ஆறுபோல்தான் தெரிகிறது,
இறங்கினால் நிச்சயம் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும், நாம் இரண்டு பேரும் மூழ்கிவிடுவோம்’ என்றது எலி.
குதிரை எலியின் பேச்சை கண்டுகொள்ளாமல் கால்வாயில் இறங்கியது, ‘ஏய் எலியே, என் முழங்கால் அளவு கூட வெள்ளம் இல்லை.
இதையை நீ ஆறு என்கிறாய், உடனே இறங்கிவா?’ என்றது குதிரை.
‘நண்பா உணக்கு வேண்டுமானால், இது குறைந்த தண்ணீராக இருக்கலாம்.
ஆனால் என் உருவத்திற்கு இது நதிபோல வெள்ளப்பெருக்கு தான்.
தயவு செய்து என்னை உன் முதுகில் ஏற்றி அக்கரையில் விடு.
நான் என்னைப் பற்றி கர்வத்துடன் பேசியதை மறந்துவிடு’ என்று மன்னிப்புக் கேட்டு அடங்கியது எலி.
‘அப்படிவா, வழிக்கு.
இனியும் வீண் பெருமை பேசி வாழாதே’
என்று எலியை, தன் முதுகில் ஏற்றி அக்கரையில் விட்டது குதிரை.
இரண்டும் கர்வமின்றி நண்பர்களாக வாழ்ந்தன.
நாளை ஒரு வாசி யோசி கருத்துக் கதையோடு சந்திப்போம்.
COMMENTS