பலிகடா உறவுகள்..!!
இரு தோழிகள் பேசிக்கொள்கிறார்கள்.
“பிறந்த
நாளுக்கு ஒண்ணும் தரலை. வெறுங்கையை வீசிட்டு வந்து நின்னார். அதுலேர்ந்து
தான் பேசறதை நிறுத்திட்டேன். அவ்வளவு சாதாரணமாப் போயிட்டோமா என்ன?”
“அடியே...
உம் புருஷன் பரவாயில்லை. எங்காளு நான் சம்பாதிச்ச காசு நூறு ரூபா
இருந்தாலும் எடுத்துட்டு குடிக்க கிளம்பிடுவாரு. உனக்கு இன்சூரன்ஸ்
இருக்கு. எனக்கு ஏதாவது வந்தா எந்த நாதியும் கிடையாது.”
“அவரு
முதல்லேர்ந்து அப்படிடீ. இவருக்கென்ன கேடு? போன வருஷம் அவங்க அக்கா
பொண்ணுக்கு மட்டும் போயி கரெக்டா சீர் பண்ண தெரியுதுல்ல? அப்ப நான்னா என்ன
வேணா பண்ணலாம்... கேக்க மாட்டான்னுதானே எண்ணம்?”
இதற்கு
முன்னும் பின்னும் என்ன நடந்திருக்கும் என நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
வரங்களை மறக்கும்; சாபங்களைத் தினம் தேடித்தேடி கற்பனை செய்துகொள்ளும்.
இந்த மன விளையாட்டின் பலிகடாக்கள் நம் நெருங்கிய உறவுகள். ஏமாற்றமும்
கோபமும் நெருங்கிய உறவுகளில் இருந்தால், அது ஒரு மனப்பழக்கமாகி வருவோர்
போவோரிடமெல்லாம் வருத்தம் கொள்ள வைக்கும்.
முகம்
தெரியாத ஆட்கள் முதல் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவுகள் வரை யார் மீது
வருத்தமும் கோபமும் கொண்டாலும், அவை தங்கிப் போகும் பாத்திரம் உங்கள் உடல்
தான். அத்தனை உஷ்ணத்தையும் அழுக்கையும் காலகாலமாக சேர்த்து வைத்தால் அந்தப்
பாத்திரம் என்னாகும்? அதைத் தினசரி துலக்குதல் நன்று. தவறு யார் மீது
இருந்தாலும் வந்த கோபத்தை வெளியேற்றி, எதிராளியிடம் மானசீகமாக மன்னிப்புக்
கோரி, அமைதி கொள்ளுவதே புத்திசாலித்தனம்.
COMMENTS