ஆலந்தூர்:
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தில் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த 117 பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரையை சோ்ந்த முகமது சலீம் சுல்தான் (வயது 32) என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் கிடைக்கவில்லை.இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவருடைய உள்ளாடைக்குள் 2 சிறிய பிளாஸ்டிக் பார்சல்களை மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 133 கிராம் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக சுல்தானிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
COMMENTS