சென்னை மாநகராட்சி பகுதியில் 18 டன் பட்டாசு கழிவு அகற்றம்: அதிகாரி தகவல்
தீபாவளிக்கு பின்னர் சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 18 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் கழிவுகள் அபாயகரமான கழிவு வகையை சேர்ந்தவை ஆகும். எனவே இந்த கழிவுகளை சாதாரண குப்பையோடு சேர்க்காமல், தனியாக சேகரித்து மறு சுழற்சி செய்ய வேண்டும்.
எனவே, பட்டாசு கழிவுகளை சாதாரண கழிவுகளுடன் சேர்க்க கூடாது என்றும், அவற்றை முறையாக பிரித்து சேகரிக்க வேண்டும் என்றும் திடக்கழிவு மேலாண்மை துறை தலைமை பொறியாளர் மகேசன், துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதன்படி சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில் உள்ள துப்புரவு பணியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பட்டாசு கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று வரை சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 18 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுகள் அனைத்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று மறுசுழற்சி மையமான கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவுகள் மேலாண்மை அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டாசு கழிவுகளை சேகரிக்கும் பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் 2017ம் ஆண்டு 85 டன் பட்டாசு கழிவுகளும், 2018ம் ஆண்டு 95 டன் பட்டாசு கழிவுகளும், 2019ம் ஆண்டு 22 டன் கழிவுகளும் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
COMMENTS