Cyclone Nivar: 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் பிற மாவட்டங்களுக்கும் அரசு பேருந்து சேவை நிறுத்தம்
சென்னை: சென்னையிலிருந்து 7 மாவட்டங்கள் வழியாக பிற மாவட்டங்களுக்கும் செல்லும் அரசு பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நிவர் புயல் குறித்து வருவாய் துறையினர், தலைமை செயலாளர், முதல்வர் என ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அது போல் புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களையும் கூரை வீடுகள், மண் வீடுகள் உள்பட பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் அறிவித்தார். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து பேருந்து சேவை இன்று மதியம் 1 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேருந்து சேவை நிறுத்தப்படுகிறது.
அது போல் விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அது போல் ஆம்னி சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
COMMENTS