சென்னை, டிச.10
செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது 25வது ஆண்டை நிறைவு செய்கிறது.
இதனையொட்டி பவரிங் டிஜிட்டல் இந்தியா என்ற புதிய இலக்கை நிர்ணயித்து அதற்கான வில்லையையும் சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.தென்கொரியாவை தலைமையிடமாக கொண்ட சாம்சங் நிறுவனம், கடந்த 1995ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது.
தற்போது 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களுடனும், 10 பில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்டக்கூடிய மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு மற்றும் மின்னணு நுகர்வோர்களைக் கொண்ட நிறுவனமாக சாம்சங் வளர்ச்சியடைந்துள்ளது.
சாம்சங் நிறுவனம் நொய்டாவில் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை உள்பட இரண்டு உற்பத்தி ஆலைகளையும், 5 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களையும், ஒரு வடிவமைப்பு மையத்தையும், 2 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்தியாவில் கொண்டுள்ளது.
எதிர்கால சேவைகளான ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை, செயற்கை நுண்ணறிவு ஆகிய பிரிவுகளில் சாம்சங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் பணிகளை மேற்கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது 25வது ஆண்டையொட்டி, பவரிங் டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான பாதையை அமைத்து அதற்காக வலுவான பங்களிப்பை அளிக்கும் என்று சாம்சங் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கென் காங் கூறினார்.
மேலும் உற்பத்தியில் புதிய முயற்சிகளைத் திட்டமிட்டு, மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக நாட்டை மாற்ற சாம்சங் உதவும் என்றும் தெரிவித்தார்.
COMMENTS