அதிரடி ரெய்டு, அபராதம்... யாருக்கும் அஞ்சாத சரயு, யாழினி..! அதிரும் புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகரை போட்டிப்போட்டுக்கொண்டு இரண்டு பெண்கள் புதுப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் உதவி ஆட்சியரான சரயு. மற்றவர், நகராட்சி சுகாதார அலுவலரான யாழினி. இவர்கள் இருவரும் தங்கள் கவனத்துக்கு வரும் மக்கள் விரோத, சட்டவிரோத ரகசியத் தகவல்கள் எதையும் அலட்சியப்படுத்துவதில்லை. அது குறித்து தீர விசாரித்து, தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு, அதிரடி ஆய்வுக்கு வியூகம் அமைக்கிறார்கள். அந்தவகையில், உதவி ஆட்சியர் சரயு இதுவரை மூன்று அதிரடி ரெய்டுகளை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களின் கடைகளுக்கு சீல் வைத்திருக்கிறார். சரயு நடத்திய ரெய்டுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியின் பின்புலம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிடி கடையில் ஆபாச வீடியோக்கள் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சரயு ரெய்டு நடத்தியக் கடையின் உரிமையாளர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான். கடையின் பெயரே 'அம்மா' என்றுதான் இருந்தது. மூன்று வாரங்களுக்கு முன்பு, அரிமளம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த மதுபான பாரில், தினமும் அதிகாலையிலேயே கூவிக்கூவி மதுபானம் விற்கிறார்கள் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, அதிகாலையே ஆய்வுக்கும் புறப்பட்டுவிட்டார் சரயு. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானப் பெட்டிகளைப் பறிமுதல் செய்து, பாருக்கு சீல் வைத்துவிட்டு வந்தார் சரயு.
இவர் இப்படி என்றால், புதுக்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலரான யாழினியும் தன் பங்குக்கு அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள மெடிக்கல் ஒன்றில், கடையின் உரிமையாளரே நோயாளிகளுக்கு ஊசி போடுகிறார் என்று இவருக்கு வந்த தகவலையடுத்து அதிரடியாக அங்கு ஆய்வு செய்து,நோயாளிகளுக்குப் பயன்படுத்திவிட்டு, அப்புறப்படுத்தாமலிருந்த நூற்றுக்கணக்கான சிரிஞ்சுகளைக் கைப்பற்றி, கடைக்கு சீல் வைத்துவிட்டு வந்தார். சுகாதாரமின்மை, சிறுநீர் நாற்றம் இவைகளுக்கு புகழ் பெற்றது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம். இதற்கு முன் எத்தனையோ சுகாதார அலுவலர்கள் முயற்சி செய்தும் பேருந்து நிலையத்தின் அவலத்தை மாற்றமுடியவில்லை. ஆனால், யாழினி அந்த முயற்சியில் ஓரளவு வெற்றிப் பெற்றிருக்கிறார். இரவும் பகலும் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு பேருந்து நிலையத்தைச் சுத்தம் செய்கிறார். கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் என்று எழுதப்பட்ட எச்சரிக்கைப் பலகையைப் பேருந்து நிலையத்தைச் சுற்றியும் பொருத்தி இருக்கிறார். இதனால் இப்போது நாற்றம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது.
தனித்தனியாக இருவரும் நடத்தும் அதிரடி நடவடிக்கைகளைத் தாண்டி, பொதுநலன் சார்ந்த விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் சரயுவும் யாழினியும் இணைந்து செயல்படுகிறார்கள். குறிப்பாக, டெங்கு ஒழிப்பு, பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பு, தூய்மை நகரம் போன்ற திட்டங்களில் மக்களை இருவரும் நேரடியாக சந்தித்து அறிவுரைகள் கூறுகின்றார்கள். அதை மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். மீறினால், அபராதம் விதிக்கவும் இந்த இரண்டு பெண்களும் தயங்குவதில்லை. இவர்களது முயற்சிகளுக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கொண்ட கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து, மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டையை ஓரளவேனும் 'புதியக்கோட்டை'யாக மாற்றும் முயற்சியில் இந்த இரண்டு பெண்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதே உண்மை.
COMMENTS