திருத்துறைப்பூண்டியில் தீயில் கருகி 45 கூரை வீடுகள் சாம்பல் : ரூ.75 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் தீயில் கருகி 45 கூரைவீடுகள் எரிந்து சாம்பலானது. ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 21 வது வார்டு பெரியநாயகிபுரம் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் குருமூர்த்தி என்பவரது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவெனஅருகிலிருந்த 3 வீடுகளிலும் பரவியது. இதில் மூன்று காஸ் சிலிண்டர்கள் வெடித்து அருகிலிருந்த கூரைவீடுகளுக்கும் தீ பரவியது. இதில் பெரியநாயகிபுரம் தங்கையன், மெய்கண்டவேல், சிவகுமார், சங்கர், வடிவேல், ராஜேந்திரன், பூபேஷ்குப்தா, கோவிந்தராஜ் உள்பட 40 பேரின் கூரைவீடுகள் எரிந்து சாம்பலானது. பக்கத்து தெருவான வ.உ.சி நகரில் 5 கூரைவீடுகளும் எரிந்து சாம்பலாயின.
தீவிபத்தில் 45 வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், நகை, பணம் என சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் முருகேசன் தலைமையில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், திருவாரூர் தீயணைப்பு துறை அலுவலர்கள் தீயணைப்புதுறை வாகனங்களுடன் விரைந்து வந்து 4 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் அந்தபகுதியில் நின்று கொண்டிருந்த நெடும்பலம் கோவில்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜு(45) என்பவர் தலையில் பலத்தகாயமடைந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த கலெக்டர் நிர்மல்ராஜ்சம்பவஇடத்தை நேரில் பார்வையிட்டு தேவையானநடவடிக்கைகளை எடுக்கவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முகாம் அமைத்து உணவு வழங்க உத்தரவிட்டார். தாசில்தார் மகேஷ்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் பெத்துராஜ், டிஎஸ்பி(பொ) இனிக்கோதிவ்யன், இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் அலுவலர்கள்,நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் வீடுகளை இழந்த 45 குடும்பத்தினருக்கு தலா ரூ 5ஆயிரம் மற்றும் வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணை வழங்கப்பட்டது. தகவலறிந்த முன்னாள்எம்.எல்.ஏ உலகநாதன், துணை ஆட்சியர் ஓய்வு பரமேஸ்வரன், திமுகநகர செயலாளர் பாண்டியன், அதிமுகநகர செயலாளர் சண்முகசுந்தர், இந்தியகம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டஅனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
உயிரிழப்பு தவிர்ப்பு
தீவிபத்து ஏற்பட்ட போது பெரியநாயகிபுரத்தில் பெரும்பாலான வீடுகள் பூட்டி கிடந்தன. பலர் வேலைக்கு சென்றுவிட்டனர். குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். பெண்கள் எல்லோரும் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுவிட்டனார்.அதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
COMMENTS