வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் பலியாவதை தடுக்க சென்சார் சிக்னல் கருவி
சத்தியமங்கலம்: வனவிலங்குகள் சாலையில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க பவானிசாகர் வனப்பகுதியில் லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசிக்கின்றன. இந்த விலங்குகள் வனப்பகுதியில் உள்ள சாலைகளை கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கின்றன. இந்நிலையில், வனப்பகுதியில் வனவிலங்குகள் சாலையை கடக்கும் பகுதியை கண்டறிந்து அப்பகுதியில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகளை பொருத்தி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வனவிலங்குகள் நடமாடுவதை அறிவதற்காக சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த 3 பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் சஞ்சாய் கூறியதாவது. லண்டன் ரப்போர்டு பவுண்டேசன் நிதிஉதவியுடன் நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் சாலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பதை அறிந்தோம். பின்னர் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வனவிலங்குகள் சாலையில் அடிபட்டு இறப்பதை தடுப்பதற்காக லேசர் சென்சார் கருவியை வடிவமைத்தோம். சூரிய ஒளி சக்தியில் இயங்கும் சோலார் தகடு மூலம் மின்கலனில் இணைத்து அதிலிருந்து லேசர் சென்சார் கருவி, ரிசீவர் மற்றும் டிரான்ஸ்மீட்டர் பொருத்தினோம். வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் சாலைக்கு வரும் இடத்தை கண்டறிந்து அந்த இடத்தில் இருபக்கமும் இந்த கருவிகளை பொருத்தினோம்.
பின்னர் சாலையில் வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் 2 இடங்களில் லேசர் சிக்னல் கருவிகளை பொருத்தினோம். இதில் சிறிய விலங்குகளான மான் மற்றும் காட்டுப்பன்றி கருவிகளுக்கிடையே கடக்கும்போது அவைகளை கண்டறிய அதன் உயரத்திற்கு ஒரு சென்சாரும், யானை போன்ற பெரிய விலங்குகள் கடக்கும்போது அதன் உயரத்தில் ஒரு சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் விலங்குகள் வரும்போது சென்சார் சிக்னல் கருவி கண்டறிந்து வனத்துறை அதிகாரிகளின் செல்போனிற்கு குறுந்தகவல் செல்வதோடு சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள லேசர் சிக்னல் கருவிக்கு சமிக்ஞை அனுப்பும்.
மான் உள்ளிட்ட சிறிய விலங்குகள் செல்லும்போது சிக்னல் கருவியில் உள்ள மஞ்சள் நிற விளக்கு எரியும் வகையிலும், யானை போன்ற பெரிய விலங்குகள் செல்லும்போது சிவப்புநிற விளக்கும் எரியும் வகையிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதை வாகன ஓட்டிகள் கண்டறிந்து வாகனத்தை மெதுவாக இயக்குவதன் முலம் வனவிலங்குகள் சாலையில் அடிபட்டு இறப்பதை தடுக்க முடியும். மேலும் தற்போது சோதனை அடிப்படையில் இந்த கருவிகள் பொருத்தி செயல்பாடுகளை கவனித்து வருகிறோம். இம்முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் வனப்பகுதியில் மேலும் சில இடங்களில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகளை பொருத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
COMMENTS