கடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி...... உளவுத்துறை எச்சரிக்கையால் பதற்றம்
கடலூர் மத்திய சிறையை தகர்த்து கைதியை கடத்தப்போவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிரியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டதாக சென்னையில் வசித்துவரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிலாங்கோடு பகுதியை சேர்ந்த அன்சர் மீரான் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதாக புகைப்படங்கள் வெளியான பிறகு அன்சர் மீரான் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறையை தகர்த்து அன்சர் மீரானை கடத்த இருப்பதாக மத்திய உளவுத்துறையினர் தமிழக சிறைத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து திருச்சி சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் நேற்று மாலை கடலூர் மத்திய சிறைக்கு வந்து சிறைக்காவலர்களுடன் அதிரடி சோதனை செய்தார். மேலும் கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டு, சிறையை சுற்றிலும் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடியவிடிய தீவிர சோதனை மேற்கொண்டதால் கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு நீடித்தது.
COMMENTS