அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்
திருவண்ணாமலை: லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான இன்று, மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மகாதீபத்தை தரிசிக்க மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். முன்னதாக அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு, ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று மாலை மகாதீப பெருவிழா நடைபெற்றது. அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் இன்று மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 5.55 மணிக்கு, கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மிகச்சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ தூய நெய், ஆயிரம் மீட்டர் திரி (காட்டன் துணி) 10 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.
COMMENTS