5 ரூபாய்க்கு டீ விற்பனை : மார்கழி குளிருக்கு அதிரடி சலுகை
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள, டீ கடை ஒன்றில், டீ பிரியர்களுக்காக, 5 ரூபாய்க்கு, டீ விற்பனை செய்யப்படுகிறது. மார்கழி குளிருக்கு இதமாக, இந்த விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.சர்க்கரை, டீ துாள், காஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால், காஞ்சிபுரம் நகர் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள டீ கடைகளில், மூன்று மாதங்களுக்கு முன், 8 ரூபாய்க்கு விற்ற டீ, 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில், பிற இடங்களில் உள்ள கடைகளைவிட பொருட்களின் விலை கூடுதலாக இருக்கும்.இந்நிலையில், காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீ கடையில், 10 ரூபாய்க்கு விற்ற டீ, 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து, டீ கடை உரிமையாளர், எஸ்.பிஜுகுமார் கூறியதாவது:கடந்த, 14 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருகிறேன். மார்கழி பனியில் பஸ் நிலையம் வருவோருக்கு, டீ குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பலருக்கு, 10 ரூபாய் கொடுத்து டீ குடிக்க முடியாத நிலை உள்ளது.இதனால், 10 ரூபாய்க்கு விற்ற டீயை, மார்கழி மாத குளிர் சலுகையாக, அதே தரத்துடன், ஐந்து ரூபாய்க்கு விற்கிறேன்.வாடிக்கையாளர்களிடம் நல்ல ஆதரவு உள்ளதால், மார்கழி முடிந்தும், இதே விலைக்கு விற்க முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
COMMENTS