👉👉தடை விதிக்கப்பட்ட நிலையில் 6 மாதத்துக்கான பிளாஸ்டிக் கவர் வாங்க தேவஸ்தானம் உத்தரவிட்டது ஏன்?
திருமலை: திருப்பதி மாநகராட்சியில் கடந்த அக்டோபர் 2ம்தேதி காந்திஜெயந்தி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திலும் நவம்பர் 1ம்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், திருமலையில் உள்ள அனைத்து கடைகளும், ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் இதை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தேவஸ்தானம் அறிவித்திருந்த அதே நவம்பர் மாதத்தில் 6 மாதத்திற்கு லட்டு வழங்க தேவையான 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 500 பிளாஸ்டிக் கவர்கள் வாங்குவதற்காக அறங்காவலர் குழு தலைவர் சுதாகர்யாதவ் தலைமையில் முடிவெடுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5ஆண்டுகளில் 11 கோடியே 78 லட்சம் பிளாஸ்டிக் கவர்களை தேவஸ்தானம் பக்தர்களுக்கு லட்டு விற்பனை மூலமாக வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கும் விதமாக அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதனை பல மாநிலங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக அட்டைப்பெட்டியில் லட்டு பிரசாதத்தை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தது. அதற்காக ஒரு லட்சம் அட்டை பெட்டிகள் வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது 6மாதங்களுக்கு தேவையான 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 500 கவர்கள் வாங்குவதற்காக அறங்காவலர் உத்தரவு பிறப்பித்தது ஏன் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே சந்தேகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
COMMENTS