உயிர் மரம்
மாலை நேரம் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மதன் அப்பப்பா இன்று ஏன் மாலை 5 மணிக்குக் கூட இவ்வளவு வெயில் அடிக்குது என்று கூறிய படியே அலுவலகப்பையை மேஜையில் வைத்துவிட்டு வரவேற்பறையில் அமர்ந்தான். என்னங்க இந்த காபியை குடித்துவிட்டு சும்மா உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்காமல் மொட்டைமாடியினை கொஞ்சம் சுத்தம் செய்துவிட்டு வாங்க. நேற்று இரவு ஒரளவு பெய்த மழையில் தண்ணீர் குழாய் வழியே தண்ணீர் வராமல் ஏதோ அடைத்து இருக்கிறது. அது என்னவென்று பாருங்களேன். நம்ம வீட்டில உள்ள இரண்டு மரமும் மாடிக்கு மேலே வளர்ந்து விட்டது. அதில் இருந்து விழர இலைச் சருகுகள்தான் குழாயினை அடைத்திருக்கும். இரண்டு வாரத்திற்கு முன்னாடியே அந்த மரத்தை வெட்ட ஆள் வரசொல்லிருக்கிறேனென்று சொன்னீர்கள்? என்னாச்சு. அவர்மனைவி தொணதொணக்க ஆரம்பிக்க அவனது எண்ணம் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
திருமணம் முடித்த கையோடு மதன் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத அந்த ஊரில் ஒரு வாடகை விட்டில் தனது அன்பு மனைவியோடு குடியேறினான். அந்த வீட்டில் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கையறை மற்றும் சமையலறை என்ற எளிய வசதிகள் இருந்தாலும் வாழ்கை மிகவும் அன்பாக பிரியமாக சென்று கொண்டிருந்தது. இந்த அன்பான வாழ்கையின் பயனாக அவர்களுக்கு அடுத்தடுத்து பொண்ணொன்று ஆணொன்று என இரண்டு குழந்தைகள். பிள்ளைகளின் பள்ளிப் பருவம் அந்த வீட்டில் ஆரம்பமாகி இனிதே சென்று கொண்டிருக்க இன்னும் சற்று பெரிய வீடு அவர்களுக்கு அத்யாவாசியத் தேவையானது.
அவனும் சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தான் இது போன்ற அன்பான சுற்றங்கள் உள்ள வீடு அமையவில்லை. உடனே இனி நாம் புதியதாக இடம் வாங்கி வீடு கட்டி அங்கு செல்வோம் என்ற முடிவுக்கு வந்தான். அருமையான இடம் ஒன்று நகரத்தின் கிழக்கு எல்லைப் பகுதியில் அதுவும் சாலையோரம் கிடைக்கப்பெற்றது. அந்தப் பகுதியில் அப்போதுதான் ஒன்று இரண்டு என வீடுகள் வளர ஆரம்பித்து இருந்தன. இவனும் கிராமத்தில் இருக்கும் அவனது தந்தையின் ஆலோசனைப் படி அந்த இடத்தை வாங்கி வங்கியில் கடனை வாங்கி மேலும் தன்னிடம் உள்ள சேகரிப்பை எல்லாம் உபயோகித்து உருப்படியாக ஒரு வீட்டைக்கட்டி அதற்கு தனது தாய் தந்தை பெயரினை இணைத்து பொன்மணியகம் எனும் பெயர் சூட்டி நல்லதொரு நாளில் சொந்த பந்தமெல்லாம் வாழ்த்த பொன்மணியகத்தில் குடிபுகுந்தான். வீடு அந்நகரின் பெரிய இஞ்சினியர் வடிவமைத்து கட்டிக்கொடுத்தது. நான்கு சென்ட் நிலம்தான் என்றாலும் அவன் மனதில் நினைத்த கனவு இல்லத்தினை உருவாக்கி இருந்தான். வீட்டின் முகப்பில் சிறியதொரு தோட்ம், மழைநீர் சேகரிக்கத் தனியாகவும் மற்றும் பஞ்சாயத்து குடிநீர் சேகரிக்கத் தனியாகவும் இரு தொட்டிகள், போர்டிகோ மற்றும் பல அறைகள் அமைத்த இரு மாடிக் கட்டிடம் அது
வீட்டில் குடியேறி ஒரு இரண்டு மாதங்கள் இருக்கும் அப்போது அவன் மகள் 5ம் வகுப்பும் மகன் 1வது வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டின் கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் மண்சாலை அமையப்பெற்ற முக்கு வீடு அது. வீட்டைச் சுற்றி சாலையோரம் அழகான மரங்கள் வைக்க வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு தோன்றியது. வீட்டு காம்பவுண்டு சுவற்றின் வெளிப்பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அதில் இரண்டு சிவப்பு கொன்றை மரக்கன்றுகளையும் (காட்டின் தீச்சுடர்) ஒரு சரக்கொன்றை மரக்கன்றையும் நட்டி வைத்து அவைகளை கால்நடைகளிடம் இருந்து காப்பாற்ற அழகான வேலியமைத்து நல்ல தண்ணீர் விட்டு வளர்த்து வந்தார்கள். பிள்ளைகளும் வளர்த்தார்கள் மரங்களும் வளர்ந்தன. மரம் முதல் மாடி உயரம் வளர்ந்திருந்த சமயம் அவை பூக்க ஆரம்பித்தன. சிவப்பு கொன்றை மரம் முழுவதும் செந்நீறப் பூக்களாகவும் சரக்கொன்றை மஞ்சள் நிறப் பூக்களாகவும் பூத்துக் குலுங்கி சாலையில் செல்வோர் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. பார்ப்போர் அனைவரும் மரங்களையும், பூக்களின் அழகினையும் வெகுவாக பாராட்டினர். அதனால் அவனுக்கு தலைகனமே வந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
அப்போதுதான் அந்தப் பிரச்சினை வந்தது. அன்று சனிக்கிழமை மதன் வெளியில் சென்று இருந்தான். அவனது மனைவிடம் இருந்து அவசரமாக போன் வந்தது. என்னங்க! இன்று மின்தடை, மின்சார ஊழியர்கள் அரிவாளோடு நம் பகுதியில் உள்ள மரக்கிளைகளை எல்லாம் வெட்டிக்கொண்டிருக்கின்றார்கள் நீங்க உடனே வீட்டுக்கு வாங்க என்று. பதறி ஓடி வந்தான். அவனது வீட்டிற்கு எதிர் திசையில்தான் மின்சார வயர்கள் சென்று கொண்டிருந்தன, இருந்தாலும் அங்கு வந்த தலைமை மின் ஊழியர் இரண்டு பெரிய கொப்புகளை கட்டாயம் வெட்ட வேண்டும் ! ரொம்ப முரண்டு பிடித்தீர்கள் என்றால் மரத்தையே வெட்டி விடுவேன் என்று பயமுறுத்தினார். கெஞ்சிப்பார்த்தான்! அவர் கேட்கவில்லை! சார், எதிர் திசையில மரம் இருந்தாலும் அடுத்து ஆடி மாதம் வருது அடிக்கிற காத்துல இந்தக் கிளை உடைஞ்சு லைன் மேலதான் விழும் அது பெரிய விபத்துல போய் முடியும் என அவர் செயலுக்கு நியாயம் சொல்லிக் கொண்டிருந்தார் மின் ஊழியர். அவன் பொறுமையாக பேசி அவரைத் தனியாக அழைத்துக் கவனித்து அனுப்பிய பின் மரம் தப்பியது. இப்படி ஒவ்வொரு மின்தடை நாளிலும் மரத்தைக் காப்பாற்றி வளர்த்து பெரிய மரமாக்கிவிட்டான்.
அவன் மகளும் பள்ளிப் படிப்பை முடிந்து வெளியூரில் கல்லூரிப் படிப்பை முடித்து இப்போது பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றாள். மகன் பள்ளியில் மேல்நிலைப்படிப்பு படித்து வருகிறான். அவனது மரங்களில் பூக்கும் பூக்களையும் அந்த சிறியத் தோட்டச் செடிகளில் மலரும் பூக்களையும் அவனது சமூக வலைத்தள பக்கங்களில் சினிமாக் கவிதைகளுடன் கலந்து வெளியிடுவது அவனது வாடிக்கை. இப்போ சமீபத்தில் அந்த மின்கம்பிகளுக்குப் பதிலாகப் பெரிய பிளாஸ்டிக் கேபிள் வயர்களாக மாற்றியதனால் மரம் வளர்க்க மின்வாரியம் மூலம் வந்த பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்தது.
இப்போது பிரச்சனை வேறு ரூபத்தில் வந்தது. வீட்டுப் போர்டிகோவை அவன் புதிதாக வாங்கிய கார் முழுவதுமாக அடைத்து நின்றது எனவே சிறிய தோட்டம் இருக்கும் பகுதியில் வண்டி மற்றும் சைக்கிளை நிறுத்த சிறிய செட் போட வேண்டிய அவசியம் வந்தது. எஞ்சினியர் வந்தார். சார் செட் போட வேண்டும் என்றால் ஒரு மரத்தை நம் வெட்டியாக வேண்டும் என்றார். மரத்துக்கு பங்கம் வராமல் அந்தப் பகுதியில் சிறிய செட்டும் மற்றும் சிறிய இரும்பு கேட் போட்ட வாசலும் நிறுவினான். அடுத்தாக அவன் வீட்டில் உள்ளவர்களே அரற்ற ஆரம்பித்தார்கள். இந்த சின்னகேட் வழியே வண்டியினை மற்றும் சைக்கிளை எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது மேலும் மரம் உயரமாக வளர்ந்து நிழல் விழுவதால் தோட்டத்தில் உள்ள செடிகளில் முன்பு போல பூக்கள் பூப்பதில்லை அதுவும் இன்றி மரத்தில் உதிரும் இலைச் சருகுகளை கூட்டிப் பெருக்கி எடுப்பது பெரிய வேலையாக உள்ளது. மரத்தை வெட்டி விடுவோம் என அவனது மனைவியே நச்சரிக்க ஆரம்பித்தாள். அன்று அவனது அப்பா ஊரிலிருந்து வந்திருந்தார் அவரிடமும் அவள் புலம்ப ஆரம்பிக்க அப்பா வெளியில் வந்து தெருவில் நின்று மரத்தை ஆய்வு செய்தார். மரம் இந்த செட்டினை அழுத்திக் கொண்டு நிற்கிறது மேலும் இந்த ரோடு இன்னும் பஞ்சாயத்தால் தார் அல்லது சிமென்ட் சாலையாகப் போட்டு பராமரிக்கப்படவில்லை எனவே மரத்தை வெட்டுவதாக இருந்தால் இப்போதே வெட்டி விட வேண்டும். சாலை போடப்பட்டால் அது அரசாங்க மரமாகிவிடும் பின்னர் அதனை நாம் நினைத்தது போல வெட்ட முடியாது எனவே மரத்தை இப்போது வெட்டி விடுவது தான் புத்திசாலித்தனம் என அவரும் அறிவுரை கூறினார். மதனும் பல கோணங்களில் சிந்தித்துப் பார்த்தான். மரம் வீட்டின் இரண்டாவது மாடியினை தொடும் உயரத்திற்கு வளர்ந்து விட்டது. மரம் வெட்டும் ஒருவரை அழைத்து வந்து மரத்தினை பாதுகாப்பாக வெட்டுவதற்கு என்ன வழி என்று அவனும் ஆலோசனை செய்தான். அவரும் இதனை இவ்வாறு பாதுகாப்பாக வெட்டி அகற்றி விடலாம் என்று கூறி சார், எப்போது வெட்ட வேண்டுமென்று சொல்கின்றீர்களோ அன்று மேலும் இரண்டு நபர்களைக் அழைத்து வந்து வெட்டி விடுகிறோம் எனக் கூறிச் சென்றார். அவனும் சரி ஒரு விடுமுறை தினத்தில் கூப்பிடுகிறேன் அன்று வாருங்கள் என்று அவரை அனுப்பி வைத்தான். பதிநான்கு ஆண்டுகளாக வளர்ந்த மரம், பிரிவதற்கு மிகவும் கஷ்மாக இருந்தது மதனுக்கு. மரம் வெட்டும் நபரிடம் பேசி இரண்டு வாரம் கடந்து விட்டது.
மீண்டும் மனைவியிடம் இருந்து என்னங்க அப்படியே பிரம்மை பிடித்த மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க? மொட்டைமாடியில் சென்று அது என்னவென்று பாருங்கள் என்று மனைவி அதட்டியவுடன் பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டு இரண்டாவது மாடிக்கு ஏற ஆரம்பித்தான் மதன்.
தண்ணீர் வரும் குழாய்களின் முகப்பில் அடைத்து இருக்கும் சருகுகளை சுத்தம் செய்து கொண்டே மரத்தைப் பார்த்தான் அது கம்பீரமாக தழைத்து வளர்ந்திருந்தது. அப்போது மரக்கிளைகளில் அவன் கண்ட காட்சி அவனை அப்படியே உறையச் செய்தது.
அந்தி மாலை நேரம் மரத்தின் மேலே பல தேன்சிட்டுகள் ஜோடி ஜோடியாக அமர்ந்து இருந்தன. அந்த பறவைகளின் சத்தம் அவனுக்கு சங்கீதமாக ஒலித்தது. மரத்தின் கிளைகளில் ஐந்து கூடுகள் இருந்தன. அதில் ஓரு கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய் சிட்டு வாயில் இருந்த உணவினை தன் குஞ்சுகளுக்கு ஊட்டிக்கொண்டு இருந்தது. தாய் சிட்டு சேய்களுக்கு உணவூட்டும் காட்சி அவனது நெஞ்சைக் கனக்கச் செய்தது. ஐயய்யோ! இந்த மரத்தையா வெட்ட நினைத்தோம்? எத்தனைக் கூடுகள் இங்கே இருக்கின்றன? தெரிந்தோ தெரியாமலோ இந்தப் பறவைகளுக்கு இன்னல் இழைக்கப்பார்த்தேனே? மாட்டேன் இனி எனக்கு எந்த சோதனை வந்தாலும் இந்த மரத்தை வெட்டவும் மாட்டேன் யாரையும் வெட்ட விடவும் மாட்டேன் எனும் முடிவோடு மாடிலிருந்து கீழிறங்க ஆரம்பித்தான் மதன். கீழே வந்தவுடன் மேலே உயரமாக வளர்திருக்கும் மரத்தைப் பார்த்தான்.
நீ உண்மையிலே உயரமான மரம் மட்டும் அல்ல, இத்தனைப் பறவைகளுக்கும் கூடு கட்ட இடம் தந்த உன்னதமான மரம் மேலும் எனக்கும் என்வீட்டார்க்கும் பிராண வாயு தந்து எங்களை உயிர்ப்பிக்கும் உயிர் மரம் என்று அதனை கைகூப்பி வணங்க ஆரம்பித்தான் . அவன் கண்கள் இரண்டும் அப்போது பனித்திருந்தன.
சாமி
COMMENTS