ஊட்டச்சத்து குறைபாடு ஆண்டுக்கு 2% குறைவு: அரசு மூத்த அதிகாரி தகவல்
ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் குறைந்து வருவதாக அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
2015-16 நிதி ஆண்டில் 38.4 சதவீதமாக இருந்த ஊட்டச்சத்து குறைபாடு, 2017-18 நிதி ஆண்டில் 34.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு சதவீதம் என்ற அளவில் குறைந்து வருகிறது. குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுக்குக் காரணமான ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை இந்தியாவில் குறைந்து வருகிறது.
இந்த விகிதம் 2004-05 நிதி ஆண்டின் போது 0-6 வயதுள்ள குழந்தைகளில் 48 சதவீதம் பேருக்கு இந்தப் பிரச்சினை இருந்தது. இது, 2015-16 நிதி ஆண்டின் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி 38.4 சதவீதமாகக் குறைந்தது தெரியவந்தது. 10 ஆண்டுகளில் 10 சதவீதம் குறைந்துள்ளது. எனில், ஆண்டுக்கு ஒரு சதவீதம் குறைவு இருந்துள்ளது. ஆனால், 2017-18 நிதி ஆண்டில் யுனிசெப் அமைப்பும், சுகாதார அமைச்சகமும் எடுத்த கணக்கெடுப்பின்படி ஊட்டச்சத்து குறைபாடு 38.4 சதவீதத்திலிருந்து மேலும் 34.7 சதவீதமாகக் குறைந்துஉள்ளது.
ஆண்டுக்கு இரண்டு சதவீதம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இது மிகப்பெரிய முன்னேற்றம். இதற்கு அரசின் பல்வேறு முயற்சிகளே காரணம் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். மார்ச் 2018-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய ‘போஷன் அபியன்’ என்ற திட்டத்தில் 2022-க்குள் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை 38.4 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 4.6 கோடி குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் நைஜீரியா (1.39 கோடி), பாகிஸ்தான் (1 கோடி) நாடுகள் உள்ளன.
COMMENTS